அமெரிக்காவுக்கு சென்றால் சொகுசாக வாழலாம் என்றும் அமெரிக்க மக்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அமெரிக்காவில் உள்ள 20 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளுக்கு மின் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பின்னர் அமெரிக்க மக்களின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின் கட்டணம்
அமெரிக்காவில் மின் கட்டணங்கள் அதிகரித்து வருவதால், முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள் தங்கள் மின் கட்டணத்தை செலுத்த சிரமப்படுகிறார்கள் என்று தனியார் நிறுவன அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க குடும்பங்கள் தங்கள் வீட்டின் மின் கட்டணங்களை செலுத்த சிரமப்படுவதாகவும், குறிப்பாக கோவிட் தொற்றுநோய்க்கு பின்னர் இந்த நிலைமை இரட்டிப்பாகியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ்
அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கொரோனா தொற்றுநோய்களின் போது பணிநிறுத்த தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பணவீக்கம் அதிகமாகியதோடு, விலைவாசியும் உயர்ந்தது. மின் கட்டணமும் வெகுவாக உயர்ந்தது.
மின்கட்டண உயர்வு
அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த மின் கட்டணங்களைவிட தற்போது 15% உயர்ந்துள்ளது. மின்கட்டண உயர்வு இயற்கை எரிவாயுவின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டில் மின் கட்டணம் கிட்டத்தட்ட இருமடங்கு என உயர்ந்துள்ளது. இந்த நிலைமை அடுத்த ஆண்டு, அதாவது 2023 வரை நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் நுகர்வு
மின் கட்டணம் ஒரு பக்கம் உயர்ந்துள்ள நிலையில் காலநிலை மாற்றம், கடுமையான வெப்பம் காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளது என்றும், அதனால் கூடுதல் மின் கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக அமெரிக்க மக்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மக்கள் பல ஆண்டுகளாக ஏர் கண்டிஷனிங்கில் தஞ்சம் அடைந்துள்ளதால் ஏசி இல்லாமல் அவர்களால் இருக்க முடியவில்லை.
அதிக சுமை
தேசிய எரிசக்தி உதவி இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் மார்க் வோல்ஃப் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஏற்கனவே அதிக சுமையை எதிர்கொண்டு வருவதால் மின் கட்டண உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. சிலரால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் அவர்களது பொருளாதாரமும், மின் கட்டண பில்லும் உள்ளது' என்று கூறியுள்ளார்.
கூடுதல் நிதி தேவை
எனவே மின்சார தேவையை பூர்த்தி செய்யவும், மின் கட்டணத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் அரசு முயற்சிக்க வேண்டும் என்றும், கூடுதல் மின் உற்பத்தியால் மின் கட்டணத்தை குறைக்கலாம் என்றும் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது. மேலும் மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு மின்சாரத்தை நிறுத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications