டெல்லி: நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக வேலையின்மை பிரச்சனை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் சிலர் மனமுடைந்து தற்கொலை செய்யும் அளவுக்கு சென்று விடுகின்றனர்.
இது குறித்தான தேசிய குற்றப் பதிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 2017 மற்றும் 2018ல் வேலையில்லாதோர் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாதோர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
வேலையில்லாதோர் தற்கொலை
கடந்த 2018ல் தற்கொலை செய்து கொண்ட வேலையற்றோரின் எண்ணிக்கை, தங்கள் வாழ்க்கையை விட்டுக்கொடுத்த விவசாயிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் மிகவும் தலைகீழாக மாறிவிட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. 2018ல் மொத்தம் 12,936 பேர் வேலையின்மை காரணமாக தங்களது உயிரை விட்டனர் என்றும் இது மொத்தத்தில் 9.6% என்றும் கூறப்படுகிறது.
தற்கொலைகள் அதிகரிப்பு
இதுவே விவசாயத்துறையில் 10,349 பேர் ஆகும். இது மொத்தத்தில் 7.7.% ஆகும். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த 2018ல் முந்தைய காலங்களை விட தற்கொலைகள் 3.6% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2017ல் 1,29,887 பேரும், இதுவே 2018ல் மொத்தம் 1,34,516 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மொத்த விபரீத சம்பவங்கள்
கடந்த 2017ல் வேலையில்லாதவர்கள் எடுத்த விபரீத முடிவால் 12,241 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது மொத்தத்தில் 9.4% என்றும் கூறப்படுகிறது. இது விவசாய துறையில் 10,655 பேர் என்றும், இது மொத்தத்தில் 8.2% பேர் என்றும் கூறப்படுகிறது.
2016ல் எத்தனை பேர்?
இதே 2016ல் விவசாய துறையில் 11,379 பேர் அதாவது மொத்தத்தில் 8.7 சதவிகிதம் பேர் தவறான முடிவினை எடுத்துள்ளதாகவும், இதே வேலையில்லாதோர் 11,173 பேர், மொத்தத்தில் 8.5% பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆக மொத்தத்தில் 2016ம் வருடம் 1,31,008 பேர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2015ல் எத்தனை பேர்?
கடந்த 2015ல் வேலையில்லாதோரில் 10,912 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது மொத்தத்தில் 8.2 சதவிகிதம் என்றும், இதே விவசாயிகள் 12,602 பேரும், மொத்தத்தில் 9.4% பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2014ல் வேலையில்லாதோர் தற்கொலை 7.5% மாகவும், இதே விவசாயிகள் தற்கொலைகள் 4.3% மட்டுமே இருந்தது.
ஆண்கள் தான் அதிகம்
இவ்வாறு வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொள்வதில் 82 சதவிகிதம் பேர் ஆண்கள் தானாம். அதிலும் பெரும்பகுதி கேரளாவில் தானாம். குறிப்பாக கேரளாவில் 1585 பேரும், இதற்கடுத்தாற்போல் தமிழகத்தில் 1579 பேரும், இதனைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவில் 1260 பேரும், கர்நாடாகவில் 1094 பேரும், உத்தரபிரதேசத்தில் 902 பேரும் தற்கொலை செய்து இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விவசாயத் துறை
விவசாயத் துறையினை பொறுத்த வரையில், இத்துறையிலான மொத்த தற்கொலையில், 5763 விவசாயிகள், 4586 விவசாய தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், இதில் 2018ல் விவசாயிகளில் 5457 ஆண்களும், 306 பெண்களும், விவசாய தொழிலாளர்களில் 4071 ஆண்களும், 515 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா தான் பர்ஸ்ட்
இந்த தற்கொலை விகிதங்களில் மஹராஷ்டிராவில் 34.7% பேரும், கர்நாடாகவில் 23.2% பேரும், தெலுங்கானாவில் 8.8% பேரும், ஆந்திர பிரதேசத்தில் 6.4% பேரும், மத்திய பிரதேசத்தில் 6.3% பேரும், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தரகாண்ட், மேகாலயா, கோவா மற்றும் சண்டிகார் உள்ளீட்ட இடங்களில் விவசாயம் சம்பந்தமானவர்கள் தற்கொலை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
வருமானம் குறைவு
மேற்கு வங்கம், மற்றும் ஒடிசாவிலும் 2017ல் விவசாயம் சம்பந்தமான தற்கொலைகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த அறிக்கையானது பாதிக்கப்படடவர்களின் பொருளாதார நிலையையும் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி தற்கொலை செய்து கொண்டவர்களில் 66% மேற்பட்டவர்களின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு குறைவாக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
2 கோடி வேலை வாய்ப்புகள்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் போதே, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் எனச் சொன்னார்கள். அந்த வேலை வாய்ப்புகள் எங்கே என கேள்வி எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது இருக்கும் வேலை வாய்ப்புகள் பறிபோகாமல் இருந்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள் இளைஞர்கள்.