சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறும் சரக்குகளை வேகமாக டெலிவரி செய்யவும், அதேசமயம் நகரப் போக்குவரத்திற்கு எவ்விதமான இடையூர் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான பாலம் கட்டும் திட்டம் பல வருடங்களாகப் பல காரணத்திற்காகக் கட்டிமுடிக்கப்படாமல் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான அரசும், தேசிய நெடுஞ்சாலை துறையும் இணைந்து புதிய திட்ட வடிவமைப்பில் அடுத்த 3 மாதத்தில் இந்தப் பாலம் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் பாலம்
2007ஆம் ஆண்டுத் தமிழக அரசு மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான பாலம் கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் 4 வருடங்களாக எவ்விதமான பணிகளும் செய்யாமல் இருந்தது, அதன் பாலம் அமைப்பதற்கான தூண்கள் கட்டி முடிக்கப்பட்ட பின் சுற்றுச்சூழ்நிலை பாதிப்புக் காரணமாக இத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை துறை
8 வருடத்திற்குப் பின்பு தேசிய நெடுஞ்சாலை துறை புதிய திட்ட வடிவத்தை முன்வைத்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட திட்டத்தில் ஒற்றை அடுக்குப் பாலத்தை இரட்டை அடுக்குப் பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
இரண்டு அடுக்கப் பாலம்
இப்புதிய திட்டத்தின் படி, மேல் அடுக்கு வர்த்தக வாகனங்கள் அதாவது லாரி மற்றும் டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள் பயன்படுத்தவும், கீழ் அடுக்குப் பயணிகள் வாகனங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
13 என்டரி மற்றும் எக்ஸிட் வாயில்
இந்த இரட்டை பாலம் திட்டத்தில் சென்னையில் முக்கியமான 13 இடங்களில் என்டரி மற்றும் எக்ஸிட் வாயில் வைக்கப்பட்டு உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, மான்டித் சாலை, பின்னி சாலை, ஸ்பர்டாங்க் சாலை, அமைந்தகரை காவல் நிலையம், காமராஜ் சாலை, சிவானந்த சாலை, கல்லூரி சாலை மற்றும் அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் என்டரி மற்றும் எக்ஸிட் வாயில் அமைக்கப்பட உள்ளது.
போக்குவரத்து நேரம் குறையும்
இத்திட்டத்தின் முந்தைய வடிவத்தில் 6 என்டரி மற்றும் எக்ஸிட் வாயில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 12 இடத்தில் அமைக்கப்படும் காரணத்தால் பயன்பாட்டு அளவு அதிகரிக்கப்படுவது மட்டும் அல்லாமல் போக்குவரத்து நேரம் பெரிய அளவில் குறைக்கப்படும்.
ஆய்வு பணிகள் துவக்கம்
தற்போது பழைய திட்டத்தின் தரம் மற்றும் அளவீடுகளைச் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த ஆய்வு முடிந்த பின்பு கட்டுமான பணிகளைத் துவங்கத் திட்டமிடப்பட்டு உள்லது. மாநில நெடுஞ்சாலை துறையும் இந்த இரட்டை அடுக்குத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள காரணத்தால் எவ்விதமான தடையும் இல்லாமல் கட்டுமான பணிகளைத் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5000 கோடி ரூபாய்
மேலும் இந்த மதுரவாயல் முதல் சென்னை துறைமுகம் வரையிலான பாலம் 5000 கோடி ரூபாய் செலவில் அடுத்த 3 மாதத்தில் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் இந்தியாவின் முதல் டபுள் டெக் பாலமாக இருக்கும்.
3 மணிநேரம் முதல் 30 நிமிடம்
இதேபோல் இந்த டபுள் டெக் பாலம் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் 30 நிமிடத்தில் உரிய இடத்தை அடைய முடியும். இந்தப் பயணம் தற்போது 3 மணிநேரத்திற்கும் அதிகமாக இருக்கிறது என மாநில நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.