எந்தவொரு தொழிலும், வேலையும், பங்குகளில் முதலீடோ செய்யாமல் ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது என்று இதுவரை நான் நினைச்சேன். நான் நினைச்சது தப்பில்லையே. ஆனால் பணம் சம்பாதிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் செய்யாமல் பலர் கோடீஸ்வரர்களாக இல்லை மெகா கோடீஸ்வரர்களாகி உள்ளனர். இதனை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால் இது நிஜம். ஒரு ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மெகா கோடீஸ்வரர்களில் பலரின் சொத்துக்களில் பெரும்பகுதி அவர்களது சுய உழைப்பில் உருவாக்கியது இல்லையாம். தொழில் அல்லது பங்குச் சந்தை அல்லது வேலை உள்பட வேறு எந்த முயற்சியிலும் அவர்கள் ஒரு நயா பைசா கூட சேர்க்கவில்லையாம்.

அப்புறம் எப்படி அவங்களிடம் அவ்வளவு மதிப்பு சொத்து இருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்ததா? எனக்கும் வந்தது. அவர்களது மூதாதையர்களின் சொத்து அவர்களுக்கு கிடைத்ததால் அவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள் என்று சுவிஸ் பேங்க் யு.பி.எஸ். அறிக்கை தெரிவித்துள்ளது.
சுவிஸ் பேங்க் யு.பி.எஸ். கடந்த 9 ஆண்டுகளாக உலகளாவிய கோடீஸ்வரர்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் பல ருசிகரமான தகவல்கள் கிடைத்தது. அந்த ஆய்வு அறிக்கையின்படி, 2023ல் உலகெங்கிலும் உள்ள சுயமாக முன்னேறிய கோடீஸ்வரர்களால் 14,100 கோடி டாலர் சொத்து உருவாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இதே காலத்தில் 53 வாரிசுகளுக்கு அவர்களது மூதாதையர்களின் 15,100 கோடி டாலர் மதிப்பிலான சொத்து கிடைத்துள்ளது. மெகா கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்தை தங்களது வருங்கால தலைமுறையினருக்கு கொடுப்பார்கள் என்பதால், அடுத்த 20-30 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் வாரிசுகளுக்கு செல்வது தொடரும்.
ஒரு 1,000 மெகா கோடீஸ்வரர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வரும் தசாப்தங்களில் சுமார் 5.2 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான சொத்துக்களை வழங்குவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், உலகம் முழுவதும் செல்வத்தை உருவாக்குவது ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
பணவீக்கம் அல்லது அமெரிக்க மந்தநிலை ஆகியவற்றை காட்டிலும் நாடுகளுக்கு இடையேயான மோதல் செல்வத்தை உருவாக்குவதில் பெரும் தடையாக இருக்கும் என்று 62 சதவீத மெகா கோடீஸ்வரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகின் கோடீஸ்வரர்களில் மூத்த தலைமுறையினரும் இருப்பர் இளம் தலைமுறையினரும் இருப்பர். மூத்த முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை சொத்து பிரிவுகளில முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதேசமயம் இளம் தலைமுறையினர் பொது மற்றும் தனியார் பங்குகளில முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications