இந்தியாவில் ப்ரீமியம் பிஸ்கெட் மற்றும் பிரெட் விற்பனை பிரிவில் சிறந்து விளங்கும் மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட் கடந்த வாரம் ஐபிஓ வெளியிட்டது. இந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் குழப்பமான மனநிலையில் இருந்த போதிலும் கிட்டதட்ட 200 மடங்கு அதிகப் பங்குகளுக்கு முதலீடுகள் குவிந்தது.
இதன் படி மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்குச் சுமார் 106 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட்
மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட் நிறுவனத்தின் ஐபிஓ டிசம்பர் 15ஆம் தேதி துவங்கி டிசம்பர் 17ஆம் தேதி முடிந்த நிலையில், 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட பங்குகள் சுமார் 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 501 ரூபாய் என்ற ப்ரீமியம் விலையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனப் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் சுமார் 19 சதவீதம் வரையில் உயர்ந்து 601 ரூபாய் விலையை அடைந்துள்ளது.
106 சதவீதம் லாபம்
இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் கடந்த 2 வார முதலீட்டுக் காலத்தில் மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்குச் சுமார் 106 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது.
மேலும் இந்தியச் சந்தையில் 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஐபிஓ-வில் மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட் நிறுவனமும் சிறப்பான லாபத்தை அளிக்க கொடுத்த ஒரு முக்கியமான நிறுவனமாக மாறியுள்ளது.
அதிக லாபம்
2020 ஐபிஓவில் மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட் நிறுவனத்திற்கு முன் டிசம்பர் 14ஆம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பர்கர் கிங் நிறுவனம் சுமார் 125 சதவீத லாபத்தைக் கொடுத்தது. இதேபோல் செப்டம்பர் 17ஆம் தேதி பட்டியலிடப்பட்ட ஹேப்பியஸ்ட் மைண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் 123 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2020 ஆண்டு ஐபிஓ
கொரோனா பாதிப்பின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் மந்தமான சூழ்நிலை நிலவிய நிலையில் ஐபிஓ மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது. இதன் மூலம் 2020 ஐபிஓ மிகப்பெரிய வெற்றியாக மாறியதுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சுமார் 14 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்ட நிலையில் 10 நிறுவனங்கள் 100 மடங்கிற்கு அதிகமாகப் பங்குகளுக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்த நிலையில், 4 நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடும் போது சரிவைச் சந்தித்தது.
வெற்றிக் கதை
45 வருடங்களுக்கு முன்பு வெறும் 300 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட மிஸ்டர்ஸ் பெக்டர்ஸ் புட் நிறுவனம் மெக்டொனால்டு போன்ற பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டு மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது.