இந்தியாவின் முக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்காதவர்களே இல்லை என கூறும் அளவுக்கு கோடிக்கணக்கான கிரிக்கெட் பிரியர்கள் இருக்கின்றனர்.
ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்களை கொண்ட ஒரு அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தான். இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இத்தனை நாட்களாக இவர் சென்னை ஐபிஎல் அணியின் ஒரு வீரர் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் உண்மையில் தோனி சிஎஸ்கே வீரர் மட்டுமல்ல, அவரும் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் தான்.

எம்.எஸ். தோனி சிஎஸ்கே அணியில் 1 லட்சத்திற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளார். இதன் மூலம் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் Minority Ownerகளில் ஒருவராக உள்ளார். ஐபிஎல் அணிகளின் தற்போதைய சந்தை மதிப்பு மற்றும் கடந்த கால மதிப்பீடுகளின் அடிப்படையில், தோனி வசம் உள்ள இந்த பங்குகளின் மதிப்பு தோராயமாக 2.6 கோடி ரூபாய் முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தோனி வைத்திருக்கும் இந்த பங்குகள், சிஎஸ்கே அணியின் மொத்த பங்கு மூலதனத்துடன் ஒப்பிடும்போது வெறும் 0.01% முதல் 0.02% மட்டுமே ஆகும். சிஎஸ்கே அணியின் பெரும்பான்மை பங்குகளை என். ஸ்ரீனிவாசனின் குடும்பத்தினர் தான் வைத்துள்ளனர். இந்த அணியின் உரிமையில் இவர்களது கட்டுப்பாடு 55 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
பொதுமக்களின் வசம் 30 கோடிக்கும் அதிகமான பங்குகள் உள்ளன. இது மொத்த பங்கு மூலதனத்தில் தோராயமாக 40 சதவீதமாகும். சிஎஸ்கே நிறுவனம் ஒரு Unlisted கம்பெனி என்பதால், இதன் பங்குகள் வெளிப்படையான திறந்த சந்தையில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. மாறாக, இவை தனியார் ஆஃப்-மார்க்கெட் பரிமாற்றங்கள் மூலமாக மட்டுமே பெறப்பட முடியும். தோனியும் கடந்த காலத்தில் இதுபோன்ற ஒரு முறையில்தான் தனது பங்குகளை வாங்கியுள்ளார்.
அண்மையில் தோனி சிஎஸ்கே அணியில் 15 முதல் 20 சதவீதம் வரை பெரிய அளவில் பங்குகளை வாங்கி அணியின் முக்கிய உரிமையாளராக மாற விரும்பியதாகவும், ஆனால் அதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகவும் செய்திகள் பரவின.ஆனால் இதனை சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி இதுபோன்று எங்களிடம் எப்போதுமே கேட்டதில்லை. இது குறித்து நாங்கள் எந்த விவாதமும் நடத்தவில்லை. என். ஸ்ரீனிவாசனிடம் தோனி இதுபற்றி பேசியதாக எங்களுக்கும் எந்த தகவலும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
அணியின் பங்குரிமையில் குறைந்த அளவே கொண்டிருந்தாலும் சிஎஸ்கே அணியின் முக்கிய முடிவுகளில் தோனியின் தாக்கம் எப்போதும் மிக அதிகமாகவே உள்ளது. அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் பதவியில் இருந்து விலகி இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்க உள்ள நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதில் தோனி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பான வீரர்களின் பரிமாற்றங்கள் மற்றும் அணியின் எதிர்கால வியூகங்கள் குறித்தும் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார்.


Click it and Unblock the Notifications


