முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக அவர் விவசாயம் செய்வதாகவும், ஸ்ட்ராபெர்ரி விவசாயம் செய்து அதனை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் எம்எஸ் தோனி வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எஸ்.தோனி முதலீடு
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஷாகா ஹாரி என்ற நிறுவனத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஷாகா ஹாரி நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது.
ஷாகா ஹாரி
இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான எம்எஸ் தோனி தங்களுடைய நிறுவனத்திற்கு ஆதரவாக முதலீடு செய்ததற்கு நன்றி என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாவர புரத பிரிவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான ஷாகா ஹாரி நிறுவனத்தில் எம்.எஸ்.தோனி முதலீடு செய்துள்ளதால் இந்நிறுவனம் மேலும் நல்ல வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கன் உணவு
ஷாகா ஹாரி நிறுவனத்தில் முதலீடு செய்தது குறித்து எம்எஸ்தோனி கூறியபோது
'எனக்கு சிக்கன் உணவு மிகவும் பிடிக்கும், ஆனால் அதே நேரத்தில் சமச்சீரான உணவை எடுத்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவேன். இறைச்சி உணவுகளுக்கு இணையான ஆரோக்கியமான அனுபவத்தை வழங்கும் ஷாகா ஹாரியின் தாவர தயாரிப்புகள் எனது விருப்பத்திற்குரிய ஒன்று' என்று கூறியுள்ளார்.
புரதம்
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ந்து வரும் நிலையில் புரத ஆதாரங்கள் நிலையானதாக இல்லை. சுவை மற்றும் அமைப்பில் சமரசம் செய்யாமல், புத்திசாலித்தனமான புரத உணவுகளுக்கு மாறுவதற்கு இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒரு சரியான தேர்வு உள்ளது. தாவர புரதப் பிரிவுக்கு ஒரு அற்புதமான நுகர்வோர் இடம் தான் ஷாகா ஹாரி' என்று எம்.எஸ். தோனி மேலும் தெரிவித்துள்ளார்.
மிகவும் மகிழ்ச்சி
லிபரேட் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆனந்த் நாகராஜன் அவர்கள் எம்.எஸ்.தோனியின் முதலீடு குறித்து கூறுகையில், 'ஷாகா ஹாரி நிறுவனத்தை வளர்ச்சி அடைய செய்வதில் எம்.எஸ். தோனியை எங்களுடன் இணைத்துக்கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார்.
எதிர்கால திட்டங்கள்
வாடிக்கையாளர் ஈர்ப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆனந்த் நாகராஜன் மேலும் கூறியபோது, 'நாங்கள் தற்போது இந்தியாவின் 10 நகரங்களில் மாதந்தோறும் 30,000 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறோம். அடுத்த சில மாதங்களில் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். மேலும் ஷாகா ஹாரி இன்னும் சில மாதங்களில் உலகளவிலும் சேவை செய்ய காத்திருக்கின்றது' என்று தெரிவித்தார்.