முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது பிரிட்டன் நாட்டில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறார்.
அதிலும் முக்கியமாகப் பிரிட்டன் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், பணவீக்கம் மோசமாக இருக்கும் இந்த வேளையில் சந்தையில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திப் பார்மசி நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தது வரும் முகேஷ் அம்பானிக்குத் தற்போது மிகப்பெரிய தடை உருவாகியுள்ளது.
பூட்ஸ் பார்மசி
பிரிட்டன் நாட்டின் மிகவும் பிரபலமான பூட்ஸ் மருந்துக் விற்பனை செய்யும் சங்கிலி கடைகளை மொத்தமாகக் கைப்பற்றுவதற்காக முகேஷ் அம்பானி கடந்த ஒருமாதமாகத் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில் பிரிட்டனின் கோடீஸ்வரர் இசா சகோதரர்களும் தற்போது போட்டிக்கு வந்துள்ளனர்.
மே 16 கடைசி
பூட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான கடைசி நாள் மே 16 அதாவது அடுத்த வாரம் முடிய உள்ள நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை விடவும் அதிகத் தொகையை முதல் சுற்றில் இசா சகோதரர்களும் சமர்ப்பித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இசா சகோதரர்கள்
பூட்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் இன்க் உடன் இணைந்து கைப்பற்ற முடிவு செய்துள்ளது. ஆனால் இசா சகோதரர்களின் வருகை முகேஷ் அம்பானிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வால்கிரீன்ஸ் நிறுவனம்
அமெரிக்க நிறுவனமான வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பூட்ஸ் நிறுவனம் பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 2200 மருந்து மற்றும் NO7 பிராண்டின் கீழ் அழகுசாதன பொருட்கள் கடைகளை வைத்துள்ளது.
7 நாடுகள் வர்த்தகம்
இந்த நிறுவனம் தற்போது பிரிட்டன் உடன் அயர்லாந்து, இத்தாலி, நார்வே, நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. பூட்ஸ் நிறுவனம் சுமார் 7 பில்லியன் பவுண்ட்ஸ் அதாவது 9.1 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி
இந்தியாவில் முகேஷ் அம்பானி தான் விரும்பும் நிறுவனத்தை அடுத்தடுத்து வாங்கி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தைக் கைப்பற்றி வந்த நிலையில், பிரிட்டனில் முகேஷ் அம்பானி வெற்றிக் கொடி நாட்டுவாரா..? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..