இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி இதுநாள் வரையில் வெவ்வேறு துறையில் இயங்கி வந்த காரணத்தால் யார் பெரும் பணக்காரர் ஆக உயரப்போவது என்ற போட்டி மட்டுமே இருந்தது.
ஆனால் தற்போது கௌதம் அதானி சொத்து மதிப்பு மிகப்பெரிய வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக இருந்த அதானி கிரீன் நிறுவனம் இயங்கும் அதே துறையில் தற்போது 10 பில்லியன் டாலர் என்ற மாபெரும் முதலீட்டில் களத்தில் இறங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உலகின் பிற முன்னணி நாடுகளைப் போலவே கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி உற்பத்தியில் இந்தியாவும் முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை தீட்டியுள்ளது.
கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி
இத்திட்டத்திற்குப் பல தளர்வுகளையும், சலுகைகளையும் அரசு அறிவித்துள்ள நிலையில் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா 450 ஜிகாவாட் அளவிலான கிளீன் மற்றும் கிரீன் எனர்ஜி உற்பத்தி செய்ய வேண்டும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
முகேஷ் அம்பானி - கௌதம் அதானி
64 வயதான முகேஷ் அம்பானி பெட்ரோலியும், டெலிகாம், ரீடைல் எனவும், 59 வயதான கௌதம் அதானி மின்சார உற்பத்தி, டிரான்மிஷன், டிஸ்ட்ரிபியூஷன், துறைமுகம், விமான நிலையம் என மாறுபட்ட துறையிலேயே இதுநாள் வரையில் வர்த்தகம் செய்து வருகின்றனர்.
75,000 கோடி ரூபாய் முதலீடு
ஜூன் மாதம் நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் மாபெரும் கிரீன் மற்றும் கிளீன் எனர்ஜி திட்டத்தை அறிவித்தார்.
திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ்
இப்புதிய வர்த்தகத்திற்காகத் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் என்ற புதிய தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
சுமார் 4 தொழிற்சாலைகள் கொண்ட இத்திட்டத்திற்கு 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்க உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
4 தொழிற்சாலைகள்
1. சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலை
2. மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரி தொழிற்சாலை
3. பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யும் Electrolyser factory
4. ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் Fuel cell தயாரிப்பு தொழிற்சாலை
கௌதம் அதானி
இந்தத் திட்டம் கௌதம் அதானியின் இன்றைய வர்த்தகத்தை விடவும் மிகப்பெரியதாக இருக்கும் காரணத்தால், பசுமை மின்சார உற்பத்தியை அதானி மீண்டும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.
அம்பானி மற்றும் அதானி
இதனால் அம்பானி மற்றும் அதானி மத்தியில் இனி வரும் காலத்தில் வர்த்தகப் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இருவரும் எந்தத் துறையில் இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ஒரே துறைக்குள் தற்போது நுழைந்துள்ள காரணத்தால் போட்டி அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications