ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, தனது சாம்ராஜ்யத்தை எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்த வர்த்தகத்தை மட்டுமே சார்ந்து இருக்க கூடாது என்பதற்காக 2015ஆம் ஆண்டில் இருந்து பல புதிய வர்த்தக துறையில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் ரிலையன்ஸ் தொழில்நுட்ப சக்தியாக மாற்றுவதற்கான மிகவும் துணிச்சலான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் முகேஷ் அம்பானி.
எப்படி ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்து தனது அடையாளத்தை மாற்றியதுபோல் தற்போது டெக் நிறுவனமாக மாற வேண்டும் என்பதற்காக செயற்கை நுண்ணறிவில் (AI) சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.25 லட்சம் கோடி) முதலீடு செய்வதன் மூலம், எதிர்காலத்தின் அடுத்த பெரும் செல்வத்தை ஈட்ட அவர் முனைப்புடன் செயல்படுகிறார். இது ரிலையன்ஸ்-ன் புதிய ஆயில் பிஸ்னஸ் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்தின் விளைவாக, ரிலையன்ஸின் AI வணிகப் பிரிவின் சந்தை மதிப்பு, முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தை விட இரு மடங்காக, அதாவது 30 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயரக்கூடும் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் கணித்து வைத்துள்ளனர்.

ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு : முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது பெட்ரோலியத் துறையை மட்டுமே சார்ந்திருந்த சாதாரண எண்ணெய் மற்றும் எரிபொருள் செயல்பாடுகளில் இருந்து தொடர்ந்து மாறுப்பட்டு பல்வகை சாம்ராஜ்ஜியமாக மாறி வருகிறது. தற்போது, அதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல கடந்த வாரம் முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் ரிலையன்ஸ் எண்டர்பிரைஸ் இன்டலிஜென்ஸ் லிமிடெட் (REIL) என்ற புதிய கூட்டு நிறுவனத்தை நிறுவியதன் மூலம் இது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த கூட்டு நிறுவனத்தில் மெட்டா நிறுவனம் 30% பங்குடன், ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனம் 70% பங்குடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் தனது தொழில்நுட்ப செயலாக்க திறனையும், டிஜிட்டல் துறையில் மேம்பட்ட கூட்டாணி வாய்ப்புகளையும் வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
12 முதல் 15 பில்லியன் டாலர் முதலீடு : தொடக்கத்தில், இந்த இரண்டு நிறுவனங்களும் REIL நிறுவனத்தின் கீழ் AI சேவைகள் உருவாக்க மற்றும் சந்தைப்படுத்த ரூ.855 கோடி அளவில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஏஐ உள்கட்டமைப்பை மேம்படுத்த சுமார் 12 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்யும் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த முதலீட்டின் முதற்கட்டமாக, ரிலையன்ஸ் 1 ஜிகாவாட் கொள்ளளவு கொண்ட தரவு மையம் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் 25% கொள்ளளவை ரிலையன்ஸ் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்த உள்ளது. மீதமுள்ள 75% கொள்ளளவை, "Datacenter as a Service" (DaaS) என்ற பிற மெகா தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தவோ அல்லது குத்தகைக்கு விடவோ திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ரிலையன்ஸ் ஏஐ சேவைகள் மற்றும் தரவு சேமிப்புத் துறையில் முக்கிய பங்களிப்பாளராகவும், மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதிலும் தனது நிலையை வலுப்படுத்துகிறது.
மொழி மாதிரிகள் மேம்படுத்துவதில் கவனம் : அம்பானியின் இந்த AI உத்தி இரண்டு முக்கியமான வழிகளில் செயல்படுகிறது. முதலாவதாக, ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனம் தனது 100 மெகாவாட் திறன் கொண்ட ஜெனரேட்டிவ் ஏஐ தரவு மையத்தை பயன்படுத்தி, மெட்டா நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் சிறிய மொழி மாதிரிகள் (Small Language Models) மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது. இதன் மூலம், நிறுவனம் ஏஐ திறன்களை உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் செயல்படுத்தும் முயற்சியை மேற்கொள்கிறது.
மேலும், ரிலையன்ஸ் தனது கூட்டாண்மைகளை கூகுள் மற்றும் அஸ்யூர் (Azure) போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், கணினி வளங்கள் மற்றும் AI கட்டமைப்புகளை விரைவாகப் பயன்படுத்தி, பல்வேறு AI சேவைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்கும் திறனை பெற்றுள்ளது.
ஜாம்பவான்களுடன் நேரடியாக போட்டியிடும் ரிலையன்ஸ் : அதேபோல் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ், உலகளாவிய ஜாம்பவான்களுடன் கைகோர்ப்பதுடன் மட்டும் நிற்காமல், அவர்களுடன் நேரடியாகப் போட்டியிடவும் தயாராகிறது. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரி அன்ஷுமன் தாக்கூர் இதுகுறித்து கூறுகையில், ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனமானது, AI சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ், சந்தைக்கு வரும் AI தயாரிப்புகளில் மெட்டா மற்றும் கூகுள் போன்றவற்றுடன் போட்டியிடுகிறது என்று கூறியுள்ளார்.
அதாவது, ரிலையன்ஸ் ஜியோ ஒருபுறம் உலக நிறுவனங்களின் AI சேவைகளை வாடிக்கையாளராகப் பயன்படுத்தும் அதே நேரத்தில், ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் அவர்களின் போட்டியாளராக திகழும் ஒரு சிக்கலான உத்தியை அனில் அம்பானி கையாளுகிறார்.
தரவு மையங்களுக்குத் தேவைப்படும் அதிகப்படியான மின்சாரத் தேவையையும், தனது தூய எரிசக்தி வணிகத்தை வளர்க்கும் வாய்ப்பாக ரிலையன்ஸ் பயன்படுத்துகிறது. ரிலையன்ஸ், 100 ஜிகாவாட் சூரிய மின்சக்தி மற்றும் 30 முதல் 40 ஜிகாவாட்-மணி பேட்டரி கொள்ளளவுக்கு 20 ஜிகாவாட்டுக்கும் அதிகமான உள் மின் தேவையை ஈடுசெய்ய உள்ளது. இதன் மூலம், தனது தரவு மையங்களின் தீராத எரிசக்தி தேவைக்கு ரிலையன்ஸின் பசுமை எரிசக்தி துறையே நீடித்த தீர்வை வழங்கும்.
ரிலையன்ஸின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு வளாகம் அமைந்துள்ள அதே இடத்தில், பசுமை ஆற்றலால் இயங்கும் ஜிகாவாட் அளவிலான AI-க்குத் தயாரான தரவு மையங்களை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் கட்ட தொடங்கியுள்ளது. இது, தனது பழைய வெற்றிக் கோட்டையான பெட்ரோலிய தளத்தையே, புதிய AI எதிர்காலத்திற்கான மையமாக மாற்றுவதை குறிக்கிறது.
30 பில்லியன் டாலர் மதிப்பீடு சாத்தியமா..?: வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் முதலீடு செய்யப்படும் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதனத்திற்கு, மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள், ஆசியாவில் உள்ள GDS போன்ற நிறுவனங்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில், குறைந்தது 2 மடங்கு நிர்ணயித்துள்ளனர். இதுவே, ரிலையன்ஸின் AI பிரிவின் மதிப்பை 30 பில்லியன் டாலராக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பானியின் இந்த நான்காவது கட்ட வர்த்தக மாற்றம் பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை வர்த்தகம், ஜியோ மூலம் தொலைத்தொடர்பு என பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தியது போல, AI துறையிலும் ஆதிக்கம் செலுத்துமா என்பதை சந்தை கூர்ந்து கவனித்து வருகிறது.
More From GoodReturns

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications