இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி 2020ல் மிகப்பெரிய தொகையை முதலீடாகத் திரட்டிய நிலையில் அனைத்து வர்த்தகத் துறையிலும் விரிவாக்க பணிகளைச் செய்து வருகிறார்.
இதன் படி நீண்ட காலம் வளர முடியாமல் தவித்து வரும் ரீடைல் எரிபொருள் வர்த்தகத்தில் தற்போது 2வது அடியை எடுத்து வைத்து தனது பயணத்தைத் துவங்கியுள்ளார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானியின் கனவு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் சிறந்து விளங்கினாலும் எரிபொருள் விற்பனை மிகவும் பின்தங்கியுள்ளது. இப்பிரிவு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது முகேஷ் அம்பானியின் மிகப்பெரிய கனவு.
அரசு ஆதிக்கம்
இந்திய ரீடைல் பெட்ரோல், டீசல் விற்பனை சந்தையில் அரசு நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இப்பிரிவிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக மிக முக்கியமான முடிவை எடுத்தது.
கூட்டணி அவசியம்
ரீடைல் எரிபொருள் விற்பனையில் தனியாளாக இருந்தால் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த முகேஷ் அம்பானி, ரீடைல் எரிபொருள் விற்பனை பிரிவில் இருக்கும் 1400 பெட்ரோல் பங்க் மற்றும் 31 விமான எரிபொருள் பங்க் அடங்கிய நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளைப் பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான BP-க்கு 1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார்.
ஜியோ - BP மொபிலிட்டி
இந்தப் பங்கு விற்பனைக்குப் பின்பு ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் 1431 எரிபொருள் நிலையத்தை அப்படியே ஜியோ - BP மொபிலிட்டி நிறுவனத்திற்கு மொத்தமாக மாற்றப்பட்டு. இக்கூட்டணி நிறுவனம் ஜியோ - BP பெயரில் இயங்க துவங்கியுள்ளது.
ஜியோ - BP பிராண்டு
இந்நிலையில் தற்போது ஜியோ - BP பிராண்டின் கிழ் முதல் ரீடைல் எரிபொருள் விற்பனை நிலையத்தை மும்பையில் திறக்கப்பட்டு உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5,500 எரிபொருள் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்பதை முக்கிய இலக்காக BP தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் லூனி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் - BP
ரிலையன்ஸ் - BP ஏற்கனவே பல எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி திட்டத்தில் பணியாற்றியுள்ள நிலையில், தற்போது நேரடி விற்பனையிலும் இறங்கியுள்ளது. பார்த் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பனை செய்யும் பட்சத்தில் ஜியோ - BP கூட்டணி ரீடைல் விற்பனை பிரிவில் மிகப்பெரிய ஆதிக்கத்தை விரைவில் சந்தையில் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் நிலையம்
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களான பார்த் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை 78,751 எரிபொருள் நிலையத்தை வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தனியார்த் துறையில் ரிலையன்ஸ் 1,427 பெட்ரோல் பங்க், நைரா எனர்ஜி 6250 பெட்ரோல் பங்க், ஷெல் 285 பெட்ரோல் பங்க் வைத்துள்ளது.