உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப் போது பல நிறுவனங்கள் தயார் செய்து வெளியிடுவார்கள்.
அப்படி தயார் செய்யும் நிறுவனங்களில் ஹூரன் ரிச் லிஸ்டும் ஒன்று. கடந்த 2019-ம் ஆண்டில் பணக்காரர்களின் சொத்து மதிப்புகளை எல்லாம் கணக்கில் கொண்டு "ஹுரன் குளோபல் ரிச் லிஸ்ட் 2020"-ஐ வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் இருக்கும் சில சுவாரஸ்ய தகவல்களைத் தான் நித செய்தியில் பார்க்கப் போகிறோம்.
பில்லியனர்கள் தேசம்
உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் வாழும் நாடு எது தெரியுமா..? உலகத்துக்கு புதிய புதிய வரிகளில், முதலாளித்துவ கொள்கையை அதிகம் பின் பற்றும் அமெரிக்காவோ அல்லது மேற்கத்திய கலாச்சாரம் என்று நம்மால் பார்க்கபப்டும் அல்லது லேபில் குத்திச் சொல்லப்படும் ஐரோப்பிய நாடுகளோ கிடையாது.
சீனா
மாறாக கம்யூனிஷ நாடாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் சீனா தானாம். உலக பில்லியனர்களில் 799 பில்லியனர்கள், சீனாவில் தான் இருக்கிறார்கள் அல்லது சீனர்களாக இருக்கிறார்கள். சீனாவுக்குப் பிறகு தான், உலகத்தின் பெரியண்ணனாக வளம் வந்து கொண்டு இருக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 626 பில்லியனர்கள் இருக்கிறார்கள். சரி இந்தியா தொடர்பான செய்திக்கு வருவோம்.
இந்தியா
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் மொத்தம் 138 பில்லியனர்கள் இடம் பிடித்து இருக்கிறார்களாம். இதில் 34 பேர் 2020-ம் ஆண்டில் புது வருகையாம். இதில் வழக்கம் போல நம் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்கிற பட்டத்தைத் தட்டிச் செல்கிறார். உலகம் முழுக்க இருக்கும் பில்லியனர்களை எல்லாம் வம்சாவளியாக கணக்கில் எடுத்துக் கொண்டால், நம் இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 170-ஐத் தொடுமாம்.
முகேஷ் அம்பானி
மேலும் முகேஷ் அம்பானியைப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் கிடைத்து இருக்கிறது. நம் முகேஷ் அம்பானி ஒரு நிமிடத்துக்கு 11.6 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறாராம். சரி நாமும் பில்லியனர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..? சிம்பில் உங்கள் சொத்து பத்து எல்லாம் சேர்த்தால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வர வேண்டும்.
இந்திய மதிப்பில்
இந்திய மதிப்பில் எவ்வளவு இருக்கும் என்று கேட்கிறீர்களா..? அதாவது 7,000 கோடி ரூபாய் வர வேண்டும். அப்படி உலகில் 2020-ம் ஆண்டின் ஹூரன் குளோபல் ரிச் லிஸ்டில் 2,817 பேர் இடம் பிடித்து இருக்கிறார்களாம். ஒட்டு மொத்தமாக உலகத்தில் 2019-ம் ஆண்டில் 480 பில்லியனர்கள் புதிதாக இடம் பிடித்து இருக்கிறார்களாம்.