இந்தியாவில் தொடர்ந்து வர்த்தகத்தையும் சேவைகளை விரிவாக்கம் செய்வதில் டாடா, அதானி, ரிலையன்ஸ் குழுமங்கள் முன்னோடியாக இருக்கும் நிலையில், தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் முகேஷ் அம்பானி இந்தியாவில் அளிக்கப்படும் பிராண்ட்பேன்ட் சேவையைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல மாபெரும் கூட்டணியில் புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆதிக்கத்தால் பல டெலிகாம் நிறுவனங்கள் இருந்த இடமே காணாமல் போன நிலையில், தற்போதும் சந்தையில் இருக்கும் நிறுவனம் கடுமையான வர்த்தகப் போட்டி உடன் வாழ்வா சாவா போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி தனது கவனத்தைப் பிராண்ட்பேன்ட் சேவை பக்கம் திருப்பியுள்ளார்.
ஜியோ பிளாட்பார்ம்ஸ் - SES
இந்தியாவில் செயற்கைகோள் வாயிலாக இயங்கும் பிராண்ட்பேன்ட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவும், இந்திய மக்களுக்கு மிகவும் மலிவான விலையில் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ், SES என்னும் குளோபல் சேட்டிலைட் கண்டென்ட் கனெக்ட்விட்டி சேவை நிறுவனத்துடன் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
51:49
ஜியோ பிளாட்பார்மஸ் மற்றும் SES இணைந்து கூட்டணியில் உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி லிமிடெட், இந்தப் புதிய நிறுவனத்தில் ஜியோ 51 சதவீத பங்குகளையும், SES 49 சதவீத பங்குகளையும் பெற உள்ளது. இதன் மூலம் இப்புதிய நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் ரிலையன்ஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.
செயற்கைக்கோள்
ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி லிமிடெட் வாயிலாகப் புவிநிலை (GEO) மற்றும் நடுத்தரப் பூமி சுற்றுப்பாதை (MEO) இருக்கும் செயற்கைக்கோள்களை இணைத்து அதன் மூலம் இந்தியா முழுவதும் ஜிகாபிட் அளவிலான வேகத்தில் இண்டர்நெட் இணைப்பை நிறுவனங்கள், ரீடைல் வாடிக்கையாளர்கள், மொபைல் சேவை நிறுவனங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
ஆகாஷ் அம்பானி
ஜியோ நிறுவனம் ஏற்கனவே பைபர் வாயிலான இண்டர்நெட் சேவை, FTTH சேவை மற்றும் 5ஜி சேவைகளை அதிகப்படியான முதலீட்டு உடன் விரிவாக்கம் செய்து வரும் நிலையில், தற்போது ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி லிமிடெட் வாயிலாக இந்தியாவின் ஒவ்வொரு மூலைகளிலும் ஜியோ வாடிக்கையாளர்களைப் பெற முடியும். மேலும் வர்த்தக நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சேவையின் தரமும் பெரிய அளவில் மேம்படும் என ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
பார்தி ஏர்டெல்
கடந்த வாரம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் ஓன்வெப் நிறுவனம் தனது செயற்கைக்கோள் வாயிலாக அளிக்கப்படும் இண்டர்நெட் சேவையை விரிவாக்கம் செய்யப் புதிதாக 34 செயற்கைக்கோள்களைப் பிரெஞ்சு கயானாவின் குரோவில் உள்ள கயானா விண்வெளி மையத்தில் இருந்து ஏரியன்ஸ்பேஸ் விண்ணில் செலுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் விரைவில் இந்தச் சேவை அறிமுகம் செய்யப்படலாம்.
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ்
இதே செயற்கைக்கோள் வாயிலாக அளிக்கப்படும் இண்டர்நெட் சேவையை எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் அளிக்க இந்தியா வந்த நிலையில் இதுவரையில் இதற்கான உரிமம் அளிக்கப்படாமல், இச்சேவைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தலைவர் இல்லாமல் இயங்கும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையில் வாடிக்கையாளர்களிடம் பெற்ற முன்பணத்தையும் ஸ்பேஸ்எக்ஸ் திரும்ப அளித்த மத்திய டெலிகாம் துறை உத்தரவிட்டுள்ளது.