அதானியின் அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தான் காரணம் என்ற யூகங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதுவரையில் இது குறித்து பெரிதாக இருவருமே பேசியதில்லை. ஆனால் சமீபத்தில் இது குறித்து முதன் முறையாக பில்லியனர், இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரான கெளதம் அதானி என்னுடைய வளர்ச்சிக்கு 4 பேர் காரணம் என பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.
தற்போது எங்கள் சொத்து மதிப்பு உயர்ந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி காரணமல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அதானி குழுமம் பற்றி தவறாக பேசப்படும் நிலையில் , அதனை தெளிவுபடுத்துமாறும் ஊடங்களுங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு மோடியால் அதிகரிக்கவில்லை
தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி உடனான நட்புறவால் தனது சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை. அத்தகைய விமர்சனம் பொய்யானது. ஆளும் பாஜக மாநிலத்தில் மட்டும் அல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் முதலீடுகளை அதிகரிக்க விரும்புகிறோம். அதானி குழுமம் தற்போது 22 மாநிலங்களில் செயல்படுகின்றது. இந்த மாநிலங்களில் மட்டும் பாஜக ஆளவில்லை.
உதவி கிடைக்காது
பிரதமர் மோடியிடம் இருந்து தனிப்பட்ட உதவியினை நீங்கள் பெற முடியாது என்பதை, நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அவரிடம் நாட்டு நலன் குறித்தும், அது குறித்தான கொள்கைகள் வகுப்பதும் குறித்தும் வேண்டுமெனில் பேசலாம். ஆனால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். அதானி குழுமத்திற்கு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானிக்கு புகழாரம்
கடந்த 7 - 8 ஆண்டுகளில் எங்களின் வருமானம் 24% அதிகரித்துள்ளது. அதே நேரம் கடனும் 11% அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
இதற்கிடையில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி குறித்து கூறிய கெளதம் அதானி, அவர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
நல்ல நண்பர்
முகேஷ் அம்பானி எனது நல்ல நண்பர். நான் அவரை மதிக்கிறேன். அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ, சில்லறை வணிகம், தொழில் நுட்பம், எண்ணெய், பெட்ரோகெமிக்கல் என பல வணிகத்தினை வெற்றிகரமான வழி நடத்தியுள்ளார். அவற்றின் மூலம் நாட்டிற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என பெருமிதப்படுத்தியுள்ளார்.
யாரும் காரணமில்லை
ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆன கெளதம் அதானி, கடந்த ஆண்டே முகேஷ் அம்பானியினை தாண்டி சொத்து மதிப்பினை அதிகரித்தவர்.
கடந்த ஆண்டு இறுதியில் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தனது வணிக வளர்ச்சிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் காரணமில்லை. தனது வளர்ச்சியினை எந்த ஒரு அரசியல் தலைவருடனும் இணைக்க முடியாது. தனது முதல் தொழில் பயணம் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தொடங்கியதாக கூறியிருந்தார்.
திருபாய் அம்பானி குறித்து?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியால், தான் மிக ஈர்க்கப்பட்டதாகவும், இந்தியாவில் வளரும் இளம் தொழில் முனைவோருக்கு திருபாய் அம்பானி உத்வேகம். எந்தவிதமான ஆதரவும் இல்லாமல், உலகத் தரம் வாய்ந்த ஒரு வணிக குழுவை அமைத்தவர் என திருபாய் அம்பானியையும் பெருமைபடுத்தியிருந்தது நினைவுகூறத்தக்கது.