இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. முடிந்த அளவு எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் அந்நாடு கடன் வாங்கி விட்டது. இதனையடுத்து வேறு எந்த வழியில் நிதி திரட்டலாம் என்று அந்நாடு பலவிதமாக யோசனை வந்தது.
பேசமால் சில அரசு நிறுவன பங்குகளை விற்பனை செய்து விடுவோம் என்று இலங்கை அரசு முடிவு எடுத்தது.

ஏற்கனவே பன்னாட்டு நிதியமும் இலங்கையிடம் முக்கியமில்லாத துறைகளை தனியார்மயமாக்க வலியுறுத்தி இருந்தது. இதுதான் நமக்கு சரியாக வரும் என்று தற்போது அந்நாடு நிதி திரட்டுவதற்கு சில துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அந்நாட்டில் தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகாம் பிஎல்சி நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. மேலும், அந்நாட்டு அரசு 2023 நவம்பர் 10ம் தேதியன்று, ஸ்ரீலங்கா டெலிகாம் பிஎல்சி நிறுவன பங்குகளை வாங்க விரும்பும் தகுதியான முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கை விடுத்து இருந்தது.
மேலும் அதற்கு காலஅவகாசம் வழங்கி இருந்தது. எங்கடா முதலீடு செய்யலாம் என்று துடித்து கொண்டிருக்கும் நம்ம முகேஷ் அம்பானி ஜிக்கு இந்த செய்தி காதில் இளையராஜாவின் இன்னிசையாக கேட்டது. உடனே, நான் வாங்க ரெடி என்று இலங்கை தொலைத்தொடர்பு நிறுவன பங்குகளை வாங்க விண்ணப்பித்து விட்டார்.
இந்நிலையில் காலஅவகாசம் முடிவடைந்ததையடுத்து கடந்த 12ம் தேதியன்று இலங்கை அரசாங்கம் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், ஸ்ரீலங்கா டெலிகாம் பிஎல்சி நிறுவன பங்குகளை வாங்க ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கோர்ட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் எல்டிஏ ஆகிய 3 சாத்தியமான முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்கு விற்பனை செய்வதற்கான சிறப்பு வழிகாட்டுதல்களின்படி முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவன பங்குகளை கைப்பற்றுவதன் மூலம் ஜியோ அந்நாடு சந்தையில் ஒரு மூலோபாய தடத்தை நோக்குகிறது. தரகு நிறுவனமான பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஜியோ பிளாட்பார்மின் மதிப்பை 10,700 கோடி டாலராக மதிப்பிட்டுள்ளது.
மேலும் ஜியோ தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் அதேவேளையில் அதன் மேம்படுத்தப்பட்ட பியூச்சர் போனான 'ஜியோபாரத்' மற்றும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சாதனமான 'ஜியோஏர்பைபர்' பெரிய அளவில் மக்களிடம் சென்றடையும் என்று பேங்க் ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications