முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 14.5% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்தத் தடாலடி உயர்வு மூலம் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் முதல் முறையாக ரூ.2 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கடந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 347 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்தப் பங்கு கடந்த ஒரு வாரத்தில் 22% மற்றும் கடந்த மூன்று மாதங்களில் 50% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் மாதம் முதல் Paytm நிறுவனத்தின் வேலெட் வர்த்தகத்தை வாங்க அம்பானி டீம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்ற தகவலும், ஜனவரி மாதம் ஆர்பிஐ பேடிஎம் வேலெட் சேவை மீதான கட்டுப்பாடுகளும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்தது.
ஆனால், விஜய் சேகர் சர்மா தலைமையிலான பேடிஎம், ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் இத்தகைய பேச்சுவார்த்தை நடந்ததை மறுத்துள்ளது. ஆயினும் இன்று ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 14.5% வரை உயர்ந்து 347 ரூபாய் என்ற என்ற வரலாற்று உச்சத்தைத் தொட வைத்துள்ளது.
NBFC நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் ஏற்கனவே ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி என்ற பேமெண்ட் வங்கியை சொந்தமாக வைத்துள்ளது, இது 2,400 முகவர்கள் உடன் சேமிப்புக் கணக்குகள் மற்றும் பில் பேமெண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி, டெபிட் கார்டுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பேடிஎம் போலவே ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனமும் QR பேமெண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் பேடிஎம், போன்பே போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைய முடியவில்லை.
மேலும் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் தனது வர்த்தக மாடலை தொடர்ந்து மாற்றி வரும் காரணத்தால் சில தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்த வேளையில் தான் பேடிஎம் வேலெட் வர்த்தகக் கைப்பற்றல் செய்தி வெளியானது. இந்த ஒரு செய்தி காரணமாக இந்நிறுவன பங்குகள் கடந்த ஒரு வாரத்தில் 22 சதவீதமும், கடந்த மூன்று மாதங்களில் 50 சதவீதமும் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications