இந்தியாவின் நம்பர் 1 கம்பெனி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு படியோ அல்லது, இந்தியாவில் அதிகம் லாபம் பார்க்கும் கம்பெனிகள் படியோ எப்படி கணக்கு போட்டு பார்த்தாலும், ரிலையன்ஸ் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனியாகத் தான் இருக்கிறது.
ரிலையன்ஸ் கம்பெனியை, மார்ச் 2021-க்குள் கடன் இல்லாத கம்பெனியாக மாற்றிக் காட்டுவேன் எனச் சொன்னார் முகேஷ் அம்பானி.
இது சாத்தியம் தானா? என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவத் தொடங்கி எல்லோரையும் கதி கலங்க வைத்தது.
அம்பானியின் அதிரடி
கொரோனாவைப் பற்றி எல்லாம் அம்பானி கவலைப்படவில்லை. கடனை அடைத்துக் காட்டுவேன் எனச் சொன்ன நொடியில் இருந்து, முகேஷ் அம்பானி, கோட்டை கழட்டி வைத்துவிட்டு, முழுக்கை சட்டையை மடித்துக் கொண்டு வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டார். முதலில் ரிலையன்ஸ் கம்பெனியின் கடன் விவரங்களைப் பார்த்துவிடுவோம். அதன் பின், எப்படி பணம் திரட்டினார் என விரிவாகப் பார்ப்போம்.
ரிலையன்ஸின் கடன் அளவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி சுமாராக 5.4 லட்சம் கோடி ரூபாயை பல வியாபாரங்களில் முதலீடு செய்தது. அதிலும் குறிப்பாக 3.5 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் முதலீடு செய்தார்கள். மார்ச் 2020 கணக்குப் படி, ரிலையன்ஸின் மொத்த கடன் 3.36 லட்சம் கோடி ரூபாய். ரிலையன்ஸ் கையில் இருக்கும் பணம் 1.75 லட்சம் கோடி ரூபாய். ஆக மீதி இருக்கும் 1.61 லட்சம் கோடி ரூபாய் தான் நிகர கடன். இந்த 1.61 லட்சம் கோடி நிகர கடனைத் தான் காலி செய்து காட்டுகிறேன் என களத்தில் இறங்கினார் அம்பானி.
ஃபேஸ்புக்
ஆட்டத்தின் முதல் பாகத்தை ஃபேஸ்புக்கிடம் இருந்து தொடங்கினார். ஒரு பெரிய கம்பெனி, உலகறிந்த புகழ்பெற்ற கம்பெனி ரிலையன்ஸில் முதலீடு செய்கிறது எனக் கேள்விப்பாட்டாலே, உலகம் முழுக்க இருக்கும் பல முதலீட்டாளர்கள், ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள் தானே. அதைத் தான் செய்தார் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ஜியோவின் 9.9 % பங்குகளை 43,574 கோடி ரூபாய்க்கு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு விற்றார்.
குட்டி முதலீடுகள்
அதன் பின் சர்க்கரையைக் கண்ட எறும்பு போல....
சில்வர் லேக் நிறுவனம் 5,656 கோடி ரூபாய், விஸ்டா ஈக்விட்டி 11,367 கோடி ரூபாய், ஜெனரல் அட்லாண்டிக் 6,598 கோரி ரூபாய், கே கே ஆர் 11,367 கோடி ரூபாய்,
முபதாலா நிறுவனத்தில் இருந்து 9,093 கோடி ரூபாய்,
மீண்டும் சில்வர் லேக் 4,547 கோடி ரூபாய், ADIA 5,683 கோடி ரூபாய்,
டி பி ஜி 4,546 கோடி ரூபாய்,
எல் கட்டர்டன் (L Catterton) 1,894 கோடி ரூபாய்,
பி ஐ எஃப் வழியாக 11,367 கோடி ரூபாய் என அடுத்தடுத்து முதலீடுகள் குவிந்தன.
மொத்தம் எவ்வளவு
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் 24.7 சதவிகித பங்குகளை விற்று, மொத்தம் 1,15,693 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறார் முகேஷ் அம்பானி. இன்னும் 75.3 சதவிகித பங்குகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வசம் தான் இருக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோவை தனி நிறுவனமாக, இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட இருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மீதி பணம்
சரி மொத்த கடன் 1.61 லட்சம் கோடி என்று தானே சொல்லி இருந்தோம். ஆனால் 1.15 லட்சம் கோடி ரூபாய் தானே இங்கு திரட்டி இருக்கிறார்கள். மீதி பணம்? என்கிறீர்களா. அட ரிலையன்ஸ் வெளியிட்ட உரிமைப் பங்குகளை (Rights Issue) மறந்துவிட்டீர்களே..! உரிமைப் பங்குகள் மட்டும் 53,124 கோடி ரூபாய். அதையும் சேர்த்துப் பார்த்தால் மொத்தம் 1.68 லட்சம் கோடி ரூபாய் வருகிறதா!
டீல் பாக்கி
இந்த டீல்களுக்கு முன்பே சவுதி அராம்கோ என்கிற மிகப் பெரிய கச்சா எண்ணெய் நிறுவனத்திடம், ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய oil to chemical பிரிவின் 20 % பங்குகளை விற்க பேசிக் கொண்டிருந்தார்கள் நினைவு இருக்கிறதா? இந்த டீல் முடிந்தால் ரிலையன்ஸுக்கு சுமாராக 1.125 லட்சம் கோடி ரூபாய் கைக்கு வருமாம். கொரோனாவால் இந்த திட்டம் செயல்படுத்த முடியவில்லை.
பெட்ரோல் டீசல் சில்லறை வணிகம்
சவுதி அராம்கோ டீல் போக, ரிலையன்ஸ் நிறுவனம், தன் எரிபொருள் வியாபாரத்தில், ஒரு கணிசமான பங்கை BP Plc என்கிற பிரிட்டிஷ் கம்பெனிக்கு விற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த டீலும் இன்னும் செயல்படுத்தவில்லை. இந்த டீல் மதிப்பு மட்டும் சுமாராக 7,000 கோடி ரூபாய். ஆக எப்படி கணக்குப் போட்டுப் பார்த்தாலும், ரிலையன்ஸ் தன் கடனுக்கு அதிகமாகவே சம்பாதித்துவிட்டது. மேலும் சம்பாதிக்க இருக்கிறது.
பெருமைப்படும் அம்பானி
"வரும் மார்ச் 2021-க்குள், ரிலையன்ஸை நிகர கடன் இல்லாத கம்பெனியாக மாற்றுவோம் என பங்குதாரர்களுக்குச் செய்திருந்த, சத்தியத்தை காப்பாற்றிவிட்டோம் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என பெருமை பொங்க பேசி இருக்கிறார் முகேஷ் அம்பானி. அதோடு ரிலையன்ஸ் தன் பொன்னான தசாப்தத்தில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் அம்பானி.