உலக அளவில் கொரோனா வைரஸ், வர்த்தகம் மற்றும் வியாபாரங்களை முழுமையாக ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்றல அது மிகை இல்லை. இந்த கால கட்டத்தில் பலரும் பல விதமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சாதாரண மக்கள், கூலித் தொழிலாளர்கள் தங்கள் வயிற்றுப் பசியைச் சமாளிக்க முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சம்பளதாரர்கள், தங்கள் வேலையை காப்பாற்றிக் கொண்டு முழு சம்பளத்தைப் பெற போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் முகேஷ் அம்பானிக்கு இந்த கவலை எல்லாம் இல்லை.
முகேஷ் அம்பானி
இவரின் தந்தை திருபாய் அம்பனி, சாதாரண துணி வியாபாரியாக தன் வியாபாரி வாழ்க்கையைத் தொடங்கி, மெல்ல கச்சா எண்ணெய் வியாபாரத்தில் கால் வைத்து, இன்று மகன் முகேஷ் அம்பானி சில்லறை வணிகம், ஆன்லைன் இ காமர்ஸ் வியாபாரம், இண்டர்நெட், டெலிகாம் என இந்தியா முழுக்க வியாபித்து இருக்கிறார் நம் முகேஷ் அம்பானி.
சொத்து மதிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்கிற மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஏப்ரல் 2020-ல், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்குப் படி, சுமாராக 36.8 பில்லியன் டாலரைத் தொட்டு இருந்தது. கொரோனா அச்சத்தால் ரிலையன்ஸ் பங்கு விலை சரிந்தது தான் இதற்கு முக்கிய காரணம்.
பெரிய சரிவு
கொரோனாவால், கடந்த மார்ச் 23, 2020 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 885 ரூபாய் வரை எல்லாம் தொட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது மீண்டும் ரிலையன்ஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 1,600 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
முதலீடுகள்
ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியில் ஃபேஸ்புக் நிறுவனம் 9.9 % பங்குகளை வாங்கியது. அதே போல விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 2.32 % பங்கை வாங்கியது. அதே போல சில்வர் லேக் கம்பெனியும் சுமாராக 1.15 % பங்குகளை வாங்கியது. இப்படி தொடர் முதலீடுகள் வந்ததால், இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸின் பங்கு விலை தாறுமாறாக ஏறி இருக்கிறது.
சொத்து மதிப்பு
மீண்டும், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்குப் படி 57.9 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. 36.8 பில்லியன் டாலரில் இருந்து, ஒரே மாதத்தில் 57.9 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. அதாவது ஒரே மாதத்தில் சுமாராக 57 சதவிகிதம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எகிறி இருக்கிறது.
ரூபாயில்
முகேஷ் அம்பானியின், இந்த 57 சதவிகித சொத்து மதிப்பு ஏற்றத்தை, இந்திய ரூபாயில் கணக்கிட்டால் சுமாராக 1,57,500 கோடி ரூபாய் எனலாம். இவ்வளவு பெரிய தொகை, ஒரே மாதத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் நமக்கோ அடுத்த மாத சம்பளம் முழுமையாக வருமா எனத் தெரியவில்லை.