முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, டெலிகாம், ரீடைல் துறையில் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் இந்தியாவின் மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதியாளர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் ஆசியாவிலேயே மிகப்பெரிய மாந்தோப்பை வைத்துள்ளது.
ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விவசாயத்தில் இறங்க மிக முக்கியமான காரணமும் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு சொந்தமான குஜராத் ஜாம்நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 1997 ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் மாசுபாடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பல புகார்களும், போராட்டமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
இதைத் தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களில் இருந்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு ஆலைக்குப் பல எச்சரிக்கைகளையும், நோட்டீஸ் அளிக்கப்பட்டுப் பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது. இதனால் அந்தப் பிரச்சனையை வேகமாகத் தீர்க்க வேண்டும் என முடிவு எடுத்தது ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிர்வாகம்.
மா தோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுத்திகரிப்பு ஆலை அமைந்திருக்கும் பகுதியில் மாசு அளவைக் கட்டுப்படுத்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் ஒரு மா தோட்டத்தை உருவாக்கும் யோசனையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்வைத்தது.
600 ஏக்கர் நிலம்
இதைத் தொடர்ந்து ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகிலுள்ள தரிசு நிலத்தைப் பசுமையான இடமாக மாற்றப்படும் முயற்சியில் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் 200 க்கும் மேற்பட்ட மா வகைகள் அடங்கிய 1.3 லட்சம் மாங்கன்றுகள் நடப்பட்டன.
தண்ணீர் பிரச்சனை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சிக்கலைத் தீர்க்கும் இந்த 600 ஏக்கர் மா தோட்டத்திற்கு, தேவையான நீரை கொண்டு வர கடல் நீரை சுத்திகரிக்கும் desalination plant அமைத்து அதன் மூலம் சுத்தமான நீரை இத்தோட்டத்தில் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் படிப்படியாக இப்பகுதியில் மாசுபாடு குறையத் துவங்கியது.
திருபாய் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் நினைவாக இந்தப் பழத்தோட்டத்திற்குத் திருபாய் அம்பானி லக்கிபாக் அம்ராயி என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பழ தோட்டத்தில் இருந்து சுமார் 127 வகையான மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மற்றும் உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
600 டன் மாம்பழம்
இதோடு இந்த 600 ஏக்கர் நிலத்தில் இருந்து வருடத்திற்குச் சுமார் 600 டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படும் காரணத்தால் ஆசியாவிலேயே மிகப்பெரிய மாம்பழ ஏற்றுமதி நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திகழ்கிறது.