ஆசிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, ஏற்கனவே பல துறைகளில் வெற்றிகரமாக கோலேச்சி வருகின்றார்.
விளையாட்டு துறையில் ஏற்கனவே தனது முதலீட்டினை செய்துள்ளவர், தற்போது அதனை மேம்படுத்த திட்டமிடுள்ளதாகவும் தெரிகிறது. தற்போது இங்கிலாந்தின் உலக புகழ்பெற்ற கால்பந்து அணியான லிவர்புல் அணியை வாங்குவதற்கான ஏலத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விற்பனை செய்ய திட்டம்
லிவர்புல் அணியின் தற்போதைய உரிமையாளரான பென்வே ஸ்போர்ட்ஸ் குரூப் (FSG), அணியை விற்பனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்கள் லிவர்பூல் அணியை வாங்கினர். இந்த அணியை தான் தற்போது 4 பில்லியன் பவுண்ட்டுக்கு விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி வாங்க திட்டமா?
இந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியைத் தான் பில்லியனர் முகேஷ் அம்பானி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி ஏற்கனவே விளையாட்டு துறையில் கால்பதித்துள்ள நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக்
முகேஷ் அம்பானியின் வசம் இருக்கும் மும்பை இந்தியன்ஸ், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளையும் நடத்தி வருகின்றது. மேலும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பில் கமர்ஷியல் பார்ட்னராகவும் இருந்து வருகின்றது.
தற்போது லிவர்புல் அணியை வாங்குவதன் மூலம் மேற்கோண்டு விளையாட்டு துறையில் தங்களது நிறுவனத்தை விரிவுபடுத்திக் கொள்ள இயலும்.
பல வணிகங்கள்
ஏற்கனவே சில்லறை வணிகம் தொடங்கி, தொலைத் தொடர்பு துறை, எண்ணெய் வர்த்தகம் என பல பக்கமும் ரவுண்டு கட்டி அடித்து வரும் அம்பானி, தனது வாரிசுகளுக்கு வணிகத்தினை பிரித்துக் கொடுக்க தொடங்கியுள்ளார். வியாபாரத்தை பிரித்து கொடுத்த கையோடு பல விலைமதிப்பில்லா அசெட்களையும் வாங்கி குவிக்க ஆரம்பித்துள்ளார்.
சர்வதேச விளையாட்டில் வலுவான இருப்பு
அந்த வகையில் தற்போது திட்டமிட்டிருப்பதும் அப்படியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் மூலம் சர்வதேச விளையாட்டு துறையில் மேற்கொண்டு அம்பானியின் இருப்பு வலுவாக இருக்கலாம்.