இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றைய வர்த்தகத்தில் 16 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டைத் தொட்டது. இந்த உயர்வைத் தொட மிக முக்கியக் காரணம் முகேஷ் அம்பானி சர்வதேச பருவகால மாநாட்டில் பேசியது தான். அப்படி என்னப்பா பேசிவிட்டார்...
முகேஷ் அம்பானி
சர்வதேச பருவகால மாநாட்டில் முகேஷ் அம்பானி உலகிலேயே முதல் நாடாக இந்தியா கிரீன் ஹைட்ரஜன் வாயுவை ஒரு கிலோ வெறும் 1 டாலருக்கு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
10 வருட இலக்கு
இது அடுத்த 10 வருடத்திற்குள் சாத்தியமாகும் என்பதையும் முகேஷ் அம்பானி இக்கூட்டத்தில் பேசியுள்ளார். இது பல நாடுகளுக்குப் பெரும் வியப்பாக இருந்துள்ளது.
கச்சா எண்ணெய்
முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தைக் கச்சா எண்ணெய் மூலம் கட்டமைத்து இன்று கொடிகட்டிப் பறக்கும் நிலையில், உலகளவில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள வேளையிலும், பருவநிலை மாற்றங்களை நினைப்பதைத் தாண்டி மிகவும் வேகமாக நிகழ்ந்து வருகிறது.
75,000 கோடி ரூபாய் முதலீடு
இந்த நிலையில், பாதிப்புகளைக் குறைக்கவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி பிரிவில் 4 தொழிற்சாலைகளை உருவாக்க 75,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளார்.
கிரீன் ஹைட்ரஜன் வாயு
இந்த 4 முக்கியமான தொழிற்சாலைகளில் இரு தொழிற்சாலைகள் ஹைட்ரஜன் வாயுவைத் தொடர்புடையது. இந்தியாவில் கிரீன் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய Electrolyser தொழிற்சாலையும், ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்த உதவும் ஹைட்ரஜன் பியூயல் செல் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது.
1 டாலர் இலக்கு
இந்த நிலையில் தான் சர்வதேச பருவகால மாநாட்டில் முகேஷ் அம்பானி ஒரு கிலோ ஹைட்ரஜன் வாயுவை வெறும் 1 டாலருக்கு தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மலிவான எரிபொருள்
உலகம் முழுவதும் கிரீன் ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்து மிகவும் மலிவான எரிபொருளாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில் பயணித்து வரும் நிலையில், முதல் கட்டமாக ஒரு கிலோ ஹைட்ரஜன் வாயுவை 2 டாலருக்குக் குறைக்க வேண்டும் என அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
இந்தியா மீது நம்பிக்கை
இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இந்தியாவில் தனது கட்டமைப்பு மூலம் நிச்சயம் அடுத்த 10 வருடத்தில் 1 டாலருக்கும் குறைவான விலைக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்தியா மீதும், இந்தியச் சந்தை மீதும் தனக்கு நம்பிக்கை இருப்பதாக அறிவித்துள்ளார் முகேஷ் அம்பானி.
பிரதமர் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கப்பட்ட மின்சாரத்தைத் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இதில் 100 ஜிகாவாட் மின்சாரத்தைச் சோலார் மின்சாரம் மூலம் உற்பத்தி செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி பேசியுள்ளார்.
சோலார் மின்சாரம்
இதற்காகவும் சோலார் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சோலார் மாடியூல் மற்றும் எலக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தும் பேட்டரி தொழிற்சாலையும் தனது 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்க உள்ளார்.
திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ்
தற்போது முகேஷ் அம்பானி குஜராத்தில் அமைத்துக்கொண்டு வரும் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் தளத்தில் சோலார் மின்சாரம் மற்றும் கிரீன் ஹைட்ரஜென் வாயுவை உற்பத்தி செய்யும் இரு தொழிற்சாலையும், இவ்விரு தொழிற்சாலையின் உற்பத்தி பொருட்களைப் பயன்படுத்துவதற்கான கருவிகளை உருவாக்கவும் தொழிற்சாலை உருவாக்கும் காரணத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கிரீன் எனர்ஜி வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.