இந்தியாவில் சீன ஆப்-கள் மீதான தடையின் எதிரொலியாக மேக் இன் இந்தியா செயலிகள் மீது மக்கள் அதிகளவிலான ஆர்வத்தைக் காட்டத் துவங்கியுள்ளனர். இதேபோல் சீன செயலிகளுக்குப் போட்டியாகச் சேவையை உருவாக்கப் பல முன்னணி நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப் பல முதலீட்டாளர்களும் தாயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் டெலிகாம் நிறுவனமான ஜியோ உலகளவில் மிகவும் பிரபலமான வீடியோ கான்பரன்ஸ் செயலியாகத் திகழும் அமெரிக்க நிறுவனமான ஜூம் ஆப்-க்குப் போட்டியாகப் புதிய வீடியோ கான்பரன்ஸ் சேவை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் மேக் இன் இந்தியா டிஜிட்டல் புரட்சியில் முகேஷ் அம்பானியின் ஜியோவும் களத்தில் இறங்கியுள்ளதை இந்தச் செயலியின் அறிமுகத்தின் மூலம் காட்டியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகம் செய்துள்ள இப்புதிய வீடியோ கான்பரன்ஸ் செயலியின் பெயர் ஜியோ மீட். கிட்டத்தட்ட ஜூம் செயலியின் அனைத்து சேவைகளையும் கொண்டுள்ளது ஜியோமீட்.
லாக்டவுன் செய்யப்பட்ட பின்பு உலகளவில் வீடியோ கான்பரன்ஸ்-ன் தேவை மக்கள் மத்தியில் அதிகரிக்கத் துவங்கிய நிலையில், ஜூம் செயலிக்குப் போட்டியாகக் கூகிள் நிறுவனம் கூகிள்மீட் என்ற செயலியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜியோவின் அறிமுகம் ஜூம் மற்றும் கூகிள்மீட் செயலிகளுக்குக் கடும் போட்டியாகத் திகழும் எனத் தெரிகிறது.
முக்கியச் சேவை
ஜியோ நிறுவனத்தின் இந்தப் புதிய ஜியோமீட் செயலியில் ஒருவருக்கு ஒருவரும் பேசிக்கொள்ள முடியும், இதேபோல் அதிகப்படியாக 100 பேர் உடன் ஓரே நேரத்தில் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும்.
மேலும் இந்தச் செயலியில் மொபைல் நம்பர் அல்லது ஈமெயில் ஐடி மூலம் நொடியில் லாக்இன் செய்யும் வசதி உள்ளது. இதனுடன் வீடியோ கான்பரன்ஸ்-ஐ வீடியோ - ஆடியோ-வை HD தரத்தில் செய்ய முடியும் என ஜியோ கூகிள் ப்ளே ஸ்டோரில் தெரிவித்துள்ளது.
24 மணிநேரம்
தற்போது ஜூம் செயலியில் நேரக் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், ஜியோ மீட் செயலியில் 24 மணிநேரமும் எவ்விதமான தடையுமின்றி HD தரத்தில் வீடியோ கான்பரன்ஸ் செய்ய முடியும். அதேபோல் எத்தனை முறை வேண்டுமானாலும் வீடியோ கான்பரன்ஸ் கால் செய்ய முடியும்.
இதுமட்டும் அல்லாமல் இன்ஸ்டென்ட் மீட்டிங், மூன்கூட்டியே செய்யப்படும் schedule மீட்டிங் ஆகிய சேவைகளும் இதில் உண்டு.
டவுன்லோடு
இதுவரை கூகிள் ப்ளே ஸ்ரோடில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜியோமீட் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். மேலும் ஜூம் செயலியில் இருக்கும் அனைத்துப் பாதுகாப்பு பிரச்சனைகளும் இதில் சரிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
ஜியோ தனது புதிய வீடியோ கான்பரன்ஸ் செயிலியான ஜியோமீட் அறிமுகம் செய்த அதேவேளையில் இன்டெல் கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து புதிய முதலீட்டை பெற்றுள்ளது.
இன்டெல் நிறுவனத்தில் இந்த 1,894 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனத்தில் கால் பங்கு பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் தற்போது சீன நிறுவனங்கள் மற்றும் அதன் முதலீட்டின் மூலம் ஆதிக்கம் செய்து வருகிறது விவாதிக்கும் வகையில் தற்போது ஜியோ நிறுவனத்திலும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.
கடந்த 4 மாதத்தில் 11 முதலீட்டாளர்கள் மூலம் 12 டீல்களில் சுமார் 25.09 சதவீத பங்குகளை விற்பனை செய்து ஜியோ சுமார் 1.17 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.