இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தைக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கெமிக்கல் வர்த்தகத்தின் வாயிலாகக் கட்டமைத்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மொத்தமாக ஓரம்கட்டிவிட்டு டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் தனது கவனத்தைத் திருப்பியது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் இரு புதிய வர்த்தகமும் பெரிய அளவிலான வெற்றி அடைந்த நிலையில், ரீடைல் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய நாட்டின் முன்னணி ரீடைல் நிறுவனங்களின் ஒன்றாக விளங்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்தது ரிலையன்ஸ் ரீடைல்.
ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசான் வழக்கு தொடர்ந்து தடைப்பெற்றுள்ள நிலையில், தற்போது புதிதாக ஒரு பிரச்சனை வந்துள்ளது. இதனால் முகேஷ் அம்பானியின் கையில் இருந்து பியூச்சர் குரூப் நழுவும் நிலை உருவாக்கியுள்ளது.
ரிலையன்ஸ் - பியூச்சர் - அமேசான்
ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான் நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனை, டெல்லி மற்றும் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், தற்போது பியூச்சர் குரூப் நிறுவனம் விற்பனை செய்ய முக்கியக் காரணமாக இருந்த கடன் பிரச்சனை தான் தற்போது புதிய பிரச்சனையாக வெடித்துள்ளது.
சொத்துக்கள் விற்பனை
பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி வசூலிக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான வழிகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது. இதனால் பியூச்சர் குரூப் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளது.
2.5 பில்லியன் டாலர் கடன்
பியூச்சர் குரூப் நிறுவனத்தின் மீது சுமார் 2.5 பில்லியன் டாலர் அளவிலான கடன் நிலுவையில் உள்ளது, இந்தத் தொகையை வசூலிக்கும் வகையில் இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் பியூச்சர் குரூப் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் கடனை வசூலிக்கத் திட்டமிட்டு உள்ளதாக 4 வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் ரத்து
கடனை வசூலிப்பதற்காகப் பியூச்சர் குரூப் சொத்துக்களை விற்பனை செய்தால் ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம் செய்த படி பியூச்சர் குரூப்-ன் சொத்துக்கள் முழுமையாகக் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உள்ளது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியில் செய்யப்பட்ட 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
கடன் மறுசீரமைப்பு
தற்போது பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் இந்நிறுவன கடனை ஒரு முறை மறுசீரமைப்புச் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் கடனுக்கான காலம் குறைக்க முடியும் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இது ரிலையன்ஸ் ரீடைல் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மகிழ்ச்சியான செய்தியாக இல்லை.
இந்தியா முழுவதும் 1700 கடைகள்
இந்தியாவின் 2வது மிகப்பெரிய ரீடைல் வர்த்தகக் குழும நிறுவனமாக இருக்கும் பியூச்சர் குரூப் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 1,700 கடைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் மளிகை பொருட்கள், ஆடை, எலக்ட்ரானிக்ஸ் எனப் பல பிரிவுகளில் ரீடைல் வர்த்தகம் செய்யும் பியூச்சர் குரூப் வர்த்தகத்தை 3.4 பில்லியன் டாலருக்கு ரிலையன்ஸ் ரீடைல் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.