இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமாக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏற்கனவே பல துறைகளிலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றது.
இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானி புதிய தொழிலுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து பல துறைகளில் முதலீடுகளை செய்து வரும் அம்பானி, சில நிறுவனங்களையும் கையகப்படுத்தி வருகின்றார். சில புதிய துறைகளிலும் காலடி பதிக்க திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ப்ளூ ஹைட்ரஜன் உற்பத்தியில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்த விலையில் உற்பத்தி
முகேஷ் அம்பானியின் இந்த திட்டம் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ப்ளூ ஹைட்ரஜன் உற்பத்தியில் சர்வதேச அளவில் மிகப்பெரிய இடத்தினை பிடிக்கவும், மிக குறைந்த விலையில் விற்பனை செய்யவும், முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பானியின் மெகா திட்டம்
இதற்காக 4 பில்லியன் டாலர் செலவிட அம்பானி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்காக ஏற்கனவே மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஏற்கனவே உள்ள எரிபொருள் ஆலையை, ப்ளூ ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கிலோவுக்கு 1.2 - 1.5 டாலருக்கு உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச நிறுவனங்களுக்கு போட்டி
பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளாக ஹைட்ரஜன் திகழ்கிறது. இதனால் அம்பானியின் இந்த திட்டம் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக பசுமை ஹைட்ரஜன் கிலோவுக்கு 1 டாலருக்கு கிடைக்கும் என கூறியிருந்தார். இந்த நிலையில் அம்பானியின் இந்த திட்டம் மேற்கொண்டு இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
தனி காட்டு ராஜா
இந்தியாவினை பொறுத்தவரையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பிறகு, மற்ற பல நிறுவனங்கள் காணாமல் போயின. அந்தளவுக்கு பலத்த ஆஃபர்களையும் சலுகைகளையும் வாரி வழங்கின. இந்த நிலையில் தான் இந்தியாவில் தனி காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டுள்ளது. இப்படி ஒவ்வொரு வணிகத்திலும் வெற்றி கொடியை நாட்டி வரும் அம்பானி, தற்போது சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போட களமிறங்கியுள்ளார். இது உண்மையில் சர்வதேச அளவிலான போட்டியாளார்களுக்கு பெரும் சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.