இந்திய சந்தைகள் கடந்த இரண்டு தினங்களாகவே சரிந்து வந்த நிலையில், இன்றும் மீண்டும் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் லார்ஜ் கேப் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த இரு வர்த்தக அமர்வில், கிட்டதட்ட 5 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இன்று மட்டும் இந்த லார்ஜ் கேப் பங்கின் விலையானது கிட்டதட்ட 2 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த திங்கட்கிழமையன்று 2.4 சதவீதம் ஏற்றம் கண்டது. ஆக மொத்தத்தில் கடந்த இரு வர்த்தக அமர்வுகளில் கிட்டதட்ட 5 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இதே நேரத்தில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் ஏற்றம் கண்டும், இதே நிஃப்டி 14,450 ஆகவும் ஏற்றம் கண்டுள்ளது.
காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பு
கடந்த வாரத்தில் சென்செக்ஸ் நிஃப்டி இரண்டும் வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில், கடந்த இரு வர்த்தக அமர்வுகளாகவே, புராபிட் புக்கிங் காரணமாக வீழ்ச்சி கண்டது. எனினும் இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று தனது மூன்றாவது காலாண்டு முடிவினை அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸப் கூட்டணி
ரிலையன்ஸ் நிறுவனம் நல்ல லாபத்தினை அறிவிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரிலையன்ஸ் நிறுவனம், தனது ஆன்லைன் ரீடெயில் வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, வாட்ஸப்புடன் கூட்டணி வைத்துக் கொள்ள உள்ளதாகவும், ஜியோமார்டில், வாட்ஸப் மூலம் ஆர்டர் செய்து கொள்ளும்படி இணைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
பெரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்
இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் சில்லறை வணிகத்தில் பெரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆறு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரலாம் என்றும், இதன் மூலம் 400 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸப், ரிலையன்ஸின் ரீடெயில் வணிகத்திற்கு பேருதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகத்தினை மேம்படுத்த உதவி
ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே சில்லறை வணிகத்தினை, ஆஃப்லைனில் வெற்றிகரமாக செய்து வரும் நிலையில், இது ஜியோமார்டுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஜியோமார்ட் வணிகத்தினை மேம்படுத்த லட்சக்கணக்கான வணிகர்களையும், உற்பத்தியாளர்களையும் தனது வணிகத்தில் இணைத்துள்ளதாக ஜியோமார்ட் தெரிவித்திருந்தது.
பங்கு விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
இந்நிலையில் ஜியோமார்ட்டுக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கும் என்றும், முதலீட்டாளர்கள் மத்தியில் உணர்வுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக இந்த பங்கில் தொடர்ந்து முதலீடும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இப்பங்கின் விலையும் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது.