இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நாட்டில் கொரோனா தொற்று தினமும் உச்சத்தைத் தொட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது நிறுவனத்தில் இருக்கும் 2 லட்சம் ஊழியர்களுக்குப் போன்ஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. திடீரெனப் போனஸ் அறிவித்துள்ளதற்கு என்ன காரணம்..?
2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வர்த்தகம் வருவாய் வேலைவாய்ப்பு என அனைத்தும் கடுமையாகப் பாதித்து இருந்து வேளையில், ரிலையன்ஸ் தனது ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவின் பங்குகளை விற்பனை செய்தது மூலம் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தைப் பெற்று முதலீட்டாளர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையைப் பெற்றது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்
இப்புதிய முதலீடுகள் மூலம் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நீண்ட காலமாகத் திட்டமிட்டு இருந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்று வந்தது. இதேவேளையில் டெலிகாம் சேவையிலும் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து சக போட்டி நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை அளித்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து சேவை வர்த்தகம் வர்த்தக விரிவாக்கம் பணிகளைச் செய்து வருகிறது.
லாபத்தில் 35 சதவீத வளர்ச்சி
இதன் எதிரொலியாக 2020-21ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் யாரும் எதிர்பார்க்காத வகையில் 35 சதவீத வளர்ச்சியில் 53,739 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது. இந்த அதிரடி வளர்ச்சியைக் கொண்டாடும் வகையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் தனது 2 லட்சம் ஊழியர்களுக்குச் செயல் திறன் அடிப்படையிலான போனஸ்/வேரியபில் பேஅவுட் ஆகியவற்றை அளிக்க முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் O2C, ரீடைல், டெலிகாம்
முகேஷ் அம்பானி தலைமையிலான நிர்வாகம் தற்போது அறிவித்துள்ள போன்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் O2C, ரீடைல், டெலிகாம் வர்த்தகத்தில் இருக்கும் 5 பிரிவுகளில் இருக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 2020-21ஆம் நிதியாண்டில் ரீடைல் வர்த்தகம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்பிரிவில் மட்டும் சுமார் 75,000 ஊழியர்களை ரிலையன்ஸ் பணியில் அமர்த்தியுள்ளது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து அதிகளவிலான வருமானத்தைப் பெற்று வந்தாலும், தனது அஸ்திவாரமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் அதனைச் சார்ந்துள்ள வர்த்தகப் பிரிவில் வருமானம் குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்கு மிக முக்கியக் காரணம் லாக்டவுன் அறிவிப்பு மூலம் கச்சா எண்ணெய் தேவையும், நாட்டின் உற்பத்தியும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
சம்பள குறைப்பு
மேலும் 2020-21 நிதியாண்டில் கொரோனா பாதிப்பால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் குறைந்த காரணத்தால் O2C வர்த்தகப் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்குச் சம்பள குறைப்பு, போனஸ்/வேரியபில் பேஅவுட் ஆகியவற்றுக்குத் தற்காலிக நிறுத்தம் போன்ற அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் லாபத்தில் 35 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதன் காரணமாகத் தற்போது இந்தப் போனஸ் அளிக்கப்படுவதாக ரிலையன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் சம்பளம்
இதேபோல் ஊழியர்கள் சம்பளம் குறைக்கப்பட்டதன் வாயிலாக முகேஷ் அம்பானி கடந்த நிதியாண்டுக்கான சம்பளம் அதாவது 15 கோடி ரூபாய் சம்பளத்தை முழுமையாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 11 வருடமாக முகேஷ் அம்பானி எவ்விதமான சம்பள உயர்வும் இல்லாமல் தொடர்ந்து 15 கோடி ரூபாய் அளவீட்டிலேயே சம்பளத்தைப் பெற்று வருகிறார்.