இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து பல துறையில் விரிவாக்கம் செய்தும், வலிமைப்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் தனது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகத்தை வலிமைப்படுத்தும் விதமாக லோக்கல் சர்ச் இன்ஜின் மற்றும் விற்பனையாளர்கள் டேட்டாபேஸ் நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜஸ்ட் டயல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட்
இந்த ஒப்பந்தம் படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 66.95 சதவீத பங்குகளை 3,497 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.
66.95% பங்குகள் கைப்பற்றல்
ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம் செய்துள்ள 66.95 சதவீத பங்குகளில், 40.95 சதவீத பங்குகளை உடனடியாகக் கைப்பற்றுவதாகவும், மீதமுள்ள 26 சதவீத பங்குகளை நிறுவன கைப்பற்றல் விதிகள் கீழ் செபி ஒப்புதல் அளிப்பதன் பெயரில் வாங்க உள்ளது ரிலையன்ஸ் ரீடைல்
ஜஸ்ட்டயல் நிறுவனம்
இன்று நடந்த ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம் 2,164.8 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
ஜஸ்ட்டயல் நிர்வாகம்
இந்தக் கைப்பற்றலுக்குப் பின்பு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ஜஸ்ட்டயல் நிறுவனத்தில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயரும் என அறிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் பங்கு கைப்பற்றும் முறை
மேலும் முதற்கட்டமாக ரிலையன்ஸ் கைப்பற்றும் 40.95 சதவீத பங்குகளில் 25.33 சதவீத பங்குகளை (2.12 கோடி பங்குகள்) நிறுவனத்தில் இருந்து நேரடியாக 1,022.25 கோடி ரூபாய்க்கும், 15.62% பங்குகளை ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் தலைவர் விஎஸ்எஸ் மணி கட்டுப்பாட்டில் இருக்கும் பங்குகளை 1,020 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் ரீடைல் வாங்குகிறது.
விஎஸ்எஸ் மணி சிஇஓ
இந்தப் பங்கு கைப்பற்றலுக்கு பின்பும் விஎஸ்எஸ் மணி ஜஸ்ட்டயல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், சிஇஓ-வாகவும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தக் கைப்பற்றல் குறித்து ரிலையன்ஸ் ரீடைல் தலைவர் ஈஷா அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.