முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ரியல் இன்வெஸ்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு டவர் இன்பராஸ்டக்ச்சர் டிர்ஸ்ட் கொடுத்த டவர் வர்த்தகத்தை ப்ரூக்பீல்டு இன்பராஸ்டக்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் அதன் நிறுவன முதலீட்டாளர்களிடம் விற்பனை செய்து சுமார் 25,215 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மொபைல் டவர் எண்ணிக்கை
இந்த விற்பனையின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ இன்பராடெல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் டவர் இன்பராஸ்டக்ச்சர் டிர்ஸ்ட் கட்டுப்பாட்டிற்குச் செல்லும். ரிலையன்ஸ் ஜியோ இன்பராடெல் நிறுவனத்தின் கீழ் சுமார் 1,30,000 டவர்கள் உள்ளது, இதுதான் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனத்திற்கு முதுகெலும்பாகச் செயல்படுகிறது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ தனது மொபைல் டவர் எண்ணிக்கையை 1,30,000இல் இருந்து 1,75,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 30 வருட ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டு மூலம் அடுத்தச் சில நாட்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 டிரில்லியன் ரூபாய்
நவம்பர் மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் 10 டிரில்லியன் ரூபாய் மதிப்பை முதல் முறையாக அடைந்த நிறுவனம் என்ற பெயரை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியது. 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 41 சதவீதம் வரையில் உயர்ந்து இருக்கிறது.
பங்கு மதிப்பு
இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1,571.00 ரூபாயாக இருக்கும் நிலையில், அமெரிக்காவின் முன்னணி பங்குசந்தை ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாச்சிஸ் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் அடுத்த 12 மாதத்திற்குள் ஒரு பங்கின் விலை நிச்சயம் 1,850 ரூபாயை தாண்டும் எனக் கணித்துள்ளது.
இந்திய முதலீட்டாளர்கள்
ஆனால் இந்தியா முதலீட்டாளர்கள் அடுத்த ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத வளர்ச்சியை அடையும் எனக் கணித்துள்ளனர். எது எப்படி இருந்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலீட்டாளர்களுக்கு இது நல்ல செய்தி தான்.
கட்டண உயர்வு
ஜியோ உட்பட இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா-வோடபோன் ஆகிய நிறுவனங்களும் தனது டெலிகாம் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியது. இது வாடிக்கையாளராகிய மக்கள் மத்தியில் கசப்பான மனநிலையை அளித்தாலும், டெலிகாம் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது.
சராசரி வருமானம்
இந்நிலையிலும் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருமானத்தின் அளவை பார்க்கும்போது மற்ற எல்லா நிறுவனங்களைக் காட்டிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் அதிகளவிலான வருவாய்ப் பெறுகிறது. இது ஏர்டெல் மற்றும் ஐடியா-வோடபோன் நிறுவனங்களுக்கு இன்றும் சவாலாகவே உள்ளது.