முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வருடாந்திர கூட்டத்தில் புதிய வர்த்தகத் துறையில் இறங்க முடிவு செய்து கிளீன் எனர்ஜி துறையைத் தேர்வு செய்தது.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் தனது சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 75000 கோடி ரூபாய் முதலீட்டில் கிளின் எனர்ஜி துறையில் இறங்கப்போவதாக அறிவித்தது.
இத்துறை வர்த்தகத்திற்காகக் குஜராத் பகுதியில் இருக்கும் ஜாம்நகரில் 4 புதிய தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகளை வேகமாகச் செய்யத் துவங்கியுள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்நிலையில் ரிலையன்ஸ்-ன் கிளீன் எனர்ஜி தொடர்பாக Bernstein நிறுவனம் ஒரு முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளது.
36 பில்லியன் டாலர் வர்த்தகம்
தரகு சேவை நிறுவனமான Bernstein, அடுத்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 36 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைக் கிளீன் எனர்ஜி வர்த்தகப் பிரிவில் மட்டும் உருவாக்க உள்ளது எனக் கணித்துள்ளது.
எனர்ஜி நிறுவனங்கள்
மேலும் பெரும்பாலான அனைத்து எனர்ஜி நிறுவனங்களும் 2 முதல் 3 மடங்கு அதிக விலைக்குத் தான் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் அடுத்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பங்கிற்கு 395 ரூபாய் அல்லது 36 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை உருவாக்கியிருக்கும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதன் மூலம் Bernstein ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கான டார்கெட் விலையை 2,470 ரூபாயில் இருந்து 2,830 ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது. ஆனால் வருடாந்திர கூட்டம் முடிந்த பின் ரிலையன்ஸ் பங்குகள் பல்வேறு காரணத்திற்காகத் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
ரிலையன்ஸ் ரீடைல்
இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்த 3 முதல் 5 வருடத்திற்கு, ஒவ்வொரு வருடமும் சராசரியாக 35 முதல் 40 சதவீதம் வரையிலான வர்த்தக வளர்ச்சியை அடையும் என எதிர்பார்ப்பதாக Bernstein அறிவித்துள்ளது. சரி ரிலையன்ஸ் கிளீன் எனர்ஜி வர்த்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது..
ரிலையன்ஸ் கிளீன் எனர்ஜி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வருடாந்திர கூட்டத்தில் அறிவித்தபடி குஜராத் ஜாம்நகரில் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ் என்ற கிளீன் எனர்ஜி-க்கான தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. சுமார் 4 தொழிற்சாலைகள் கொண்ட இத்திட்டத்திற்கு முதற்கட்டமாகச் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய எனர்ஜி வர்த்தகத்தைத் துவங்க முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.
4 முக்கியத் திட்டங்கள்
முதல் தொழிற்சாலை: சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலை
2வது தொழிற்சாலை: எலக்ட்ரிக் கார் முதல் அனைத்து பயன்பாட்டிற்கு மின்சாரத்தைச் சேமிக்கும் பேட்டரி தொழிற்சாலை
3வது தொழிற்சாலை:. பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்யப் புதிய Electrolyser factory
4வது தொழிற்சாலை:. ஹைட்ரஜன் வாயுவை கார்களில் எரிபொருளாகப் பயன்படுத்தும் Fuel cell தயாரிக்கும் தொழிற்சாலை
சோலார் மாடியூல்
இந்தியாவில் மாற்று எரிபொருளுக்கான தேவை மிகவும் அதிகமாகியுள்ளது. இந்தத் தேவையைச் சரியான நேரத்தில் கண்டறிந்த முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே குறைந்த விலையில் சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சோலார் போட்டோவோல்டாயிக் செல்-ஐ தயாரிக்கு புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உற்பத்தி செய்யும் 450 ஜிகாவாட் மின்சாரத்தில் ரிலையன்ஸ் 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
எலக்ட்ரிக் பேட்டரி தயாரிப்பு
வரும் ஆண்டுகளில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் நாட்டின் சேவையைப் பூர்த்தி செய்ய மின்சாரச் சேமிப்புப் பிரிவில் எலக்ரோ கெமிக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிநவீன பேட்டரியை தயாரித்து ஆட்டோமொபைல் முதல் அனைத்து துறைகளுக்கும் பேட்டரி விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஹைட்ரஜன் வாயு உற்பத்தி
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வது போல் புதிகாகத் திருபாய் அம்பானி கிரீன் எனர்ஜி ஜிகா காம்ப்ளக்ஸ்-ல் அமைக்கப்படும் Electrolyser factory மூலம் பசுமை ஹைட்ரஜன் வாயுவை தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் வெளிநாட்டிலும் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளார் முகேஷ் அம்பானி.
ஹைட்ரஜன் வாயு கார்
பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கும் தொழில்நுட்பத்தைப் பெரும் வர்த்தகமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது. இதற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Electrolyser factory பெரும் உதவியாக இருக்கும்
ஹைட்ரஜன் பியூயல் செல்
இந்தியா மட்டும் அல்லாமல் உலக ஆட்டோமொபைல் சந்தையின் எதிர்காலமே எலக்ட்ரிக் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் தான் என்ற நிலைமை விரைவில் வர உள்ள காரணத்தால், இந்தியாவில் ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் ஹைட்ரஜன் பியூயல் செல் உருவாக்க அமைக்கப்படுவது தான் இந்த 4 தொழிற்சாலை.
ஆட்டோமொபைல் துறை
ரிலையன்ஸ் தயாரிக்கும் ஹைட்ரஜன் பியூயல் செல் மூலம் கார் மட்டும் அல்லாமல் லாரி, பஸ் போன்ற கன ரக வாகனங்களும் இயக்க முடியும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.