இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இம்மாநில மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாக சுமார் 1000 படுக்கை கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை அமைக்க உள்ளார்.
இந்த மருத்துவமனையில் அனுமதி செய்யப்படுவோருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் அனைத்தும் குஜராத் ஜாம்நகரில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து நேரடியாக சப்ளை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2வது கொரோனா அலை
முதல் கொரோனா அலையின் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கும் நேரத்தில் 2வது கொரோனா அலை பெரிய அளவிலான பாதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் வர்த்தகம், பொருளாதாரத்தைத் தாண்டி, கொரோனாவில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசையும், மக்களையும் பயமுறுத்துகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி
இந்நிலையில் குஜராத் மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மிகப்பெரிய சுத்திகரிப்பு தொழிற்சாலை இருக்கும் குஜராத் மாநிலத்தில் 1000 படுக்கை கொண்ட மருந்துவமனை அமைத்து ஆக்சிஜன் முதல் அடிப்படை கட்டுமானம், தேவையான உபகரணங்கள் மற்றும் அடிப்படை சிகிச்சைகளுக்குத் தேவையானவற்றை ரிலையன்ஸ் நிர்வாக அளிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி உறுதி அளித்துள்ளார்.
குஜராத் மாநில அரசு
குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் இப்புதிய மருத்துவமனையில் 400 படுக்கைகள் தயாராக இருக்கும் என்றும் மீதமுள்ள 600 படுக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் தாயாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குஜராத் மக்கள்
இப்புதிய மருத்துவமனை மூலம் ஜாம்நகர், தேவ்பூமி - துவாரகா, போர்பந்தர் மற்றும் சவ்ராஷ்டிரா பகுதியில் இருக்கும் பிற மாநிலங்களில் இருக்கும் மக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் எனக் குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவமனையைக் குஜராத் அரசும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து நிர்வாகம் செய்ய உள்ளதாகவும் குஜராத் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் இருப்பு
மேலும் மருத்துவமனை துவங்கும் போதே போதுமான ஆக்சிஜன் இருப்புடன் துவங்கும் காரணத்தால் அதிகளவிலான கொரோனா நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். இதேபோல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் நிலையில் கொரோனாவை விரைவில் குஜராத் மாநிலத்தில் கட்டுப்படுத்த முடியும் எனக் கணிக்கப்படுகிறது.
ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே குஜராத், மகாராஷ்டிரா எனப் பல மாநிலங்களுக்குத் தனது ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ஆக்சிஜன் தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. தினமும் 100 டன் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கும் தொழிற்சாலையில் தற்போது 700 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நாடு முழுவதும் ஆக்சிஜன்-கான தேவை அதிகமாக இருக்கும் காரணத்தால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தினமும் 1,100 டன் ஆக்சிஜனை தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் இந்தியாவில் பல தொழிற்சாலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.