முகேஷ் அம்பானிக்கு அதிகம் இண்ட்ரோ தேவை இல்லை. உலக பணக்காரர்களில் ஒருவர், ஆசியாவின் டாப் பணக்காரர்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் டெலிகாம் சேவையில் முழுமையாக இறங்கினார். இறங்கிய சில மாதங்களிலேயே, இந்திய டெலிகாம் வியாபாரத்தையே முழுமையாக மாற்றிவிட்டார்.
இப்போது தன் நிறுவனத்தின் கடன்களை அடைக்க, அடுத்த கட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதற்காக தன் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளை பல நிறுவனங்களிடம் விற்று கொண்டு இருக்கிறார்.
முந்தைய முதலீடுகள் 1
ரிலையன்ஸ் ஜியோவின் 9.9 % பங்குகளை, ஃபேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்து வாங்கிக் கொண்டது. அதோடு சில்வர் லேக் என்கிற நிறுவனமும் 5,655 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தது. ஆக மொத்தம் 49,229 கோடி ரூபாயை திரட்டி விட்டார்.
முந்தைய முதலீடுகள் 2
அதே போல விஸ்டா ஈக்விட்டி என்கிற கம்பெனி, ரிலையன்ஸ் ஜியோவில் 2.32 % பங்குகளை வாங்கி 11,367 கோடி ரூபாயை முதலீடு செய்தது. அதனைத் தொடர்ந்து ஜெனரல் அட்லாண்டிக் என்கிற நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவில் சுமாராக 1.34 % பங்குகளை வாங்கி 6,600 கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறது ஆக மொத்தம் 17,967 கோடி ரூபாய் திரட்டி விட்டார்.
ஐந்தாவது முதலீடு
இப்போது கே கே ஆர் (KKR) என்கிற கம்பெனி, ரிலையன்ஸ் ஜியோவில் 2.32 % பங்குகளை வாங்க இருக்கிறார்களாம். அதற்கு 11,367 கோடி ரூபாய் விலை கொடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த முதலீடு, கே கே ஆர் நிறுவனம் ஆசியாவில் செய்யும் மிகப் பெரிய முதலீடு எனச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஜியோ மதிப்பு
கே கே ஆர் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை 4.91 லட்சம் கோடி ரூபாயாகவும், மொத்த நிறுவனத்தின் மதிப்பை (Enterprise Value) 5.16 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிட்டு இருக்கிறார்களாம். ஆக இதுவரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகளை விற்று 78,562 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
ரிலையன்ஸ் பங்கு விலை
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு, புதிதாக வரும் முதலீடு செய்தி, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பாசிட்டிவ் செண்டிமெண்டை உருவாக்கி இருப்பதாகவே தெரிகிறது. ரிலையன்ஸ் பங்கு விலை சுமாராக 0.8 % அதிகரித்து 1,452 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.