இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி எப்படி தனது ரீடைல் வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்தாரோ அதேபோல் தற்போது நிதி சேவை வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் ஹோம் லோன் துவங்கி இன்சூரன்ஸ், பேமெண்ட்ஸ், லீசிங் என 7 கிளை நிறுவனங்களை கொண்டு மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது. ரிலையன்ஸ் நிதி சேவை துறைக்கும், முதலீட்டு சேவை துறைக்கும் புதியது என்பதால் ஒவ்வொரு சேவைக்கும் இத்துறையில் இருக்கும் மிகப்பெரிய ஜாம்பவான் உடன் கைகோர்த்து தனது சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது.

உதாரணமாக மியூச்சுவல் பண்ட், வெல்த் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் ப்ரோகிங் சேவை அளிப்பதற்காக அமெரிக்காவின் பிளாக்ராக் உடன் 50:50 கூட்டணியில் Jio BlackRock என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதேபோல் ரீஇன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் போன்ற சேவைகளை வழங்க ஜெர்மனி நாட்டின் Allianz நிறுவனத்துடன் இணைந்து 50:50 கூட்டணியில் Allianz Jio Reinsurance மற்றும் Jio Allianz General Insurance என இரு தனித்தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
அடுத்தக்கட்டமாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கீழ் NBFC நிறுவனமாக இருக்கும் Jio Credit Limited மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. Jio Credit நிறுவனம் தனி கிளை நிறுவனமாகவும், வீட்டுக்கடன், பிணையத்திற்கு எதிரான கடன், கமர்சியல் மற்றும் சப்ளை செயினுக்கான கடன்களை அளித்து வருகிறது.
ஜியோ கிரெடிட் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் முகேஷ் அம்பானி NBFC பிரிவின் வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக அமெரிக்காவின் பேங்க் ஆப் அமெரிக்கா உடன் கூட்டணி வைத்துள்ளார்.
ஆம் Jio Credit நிறுவனத்தின் சுமார் 49.9 சதவீத பங்குகளை பேங்க் ஆப் அமெரிக்காவுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் 18000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் முகேஷ் அம்பானி. எதற்காக முகேஷ் அம்பானி எத்தகைய பெரும் பங்குகளை விற்க வேண்டும்..? இதற்கான லாபம் + அதிக மதிப்பு + அதிக வாய்ப்பு.
ஜியோ கிரெடிட் நிறுவனம் ஒரு NBFC என்பதால் பெரும்பாலான கடன்களை, மக்களுக்கு வெளியில் இருந்து வாங்கிய கடன் தொகையை கொண்டு தான் அளித்து வருகிறது. இதனால் ஜியோ கிரெடிட்-ன் நிதியியல் செலவு என்பது 39 கோடியில் இருந்து 844 கோடி ரூபாயாக கடந்த 2 வருடத்தில் உயர்ந்துள்ளது. இதனால் லாப அளவீடுகள் 30.2 சதவீதத்தில் இருந்து 14.9 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போது பேங்க் ஆப் அமெரிக்கா போன்ற பெரிய உலகளாவிய வங்கிகள் உடன் கூட்டணி வைக்கும் போது நிதி ஆதாரம், புதிய நிதி திரட்டுவதற்கான வழிகள் அதிகரிக்கும். இதனால் உடனடியாக இல்லாவிட்டாலும் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் லாபம் அதிகரிக்கும்.
பேங்க் ஆப் அமெரிக்கா உடனான கூட்டணி மூலம் ஜியோ பைனான்ஸ் நிறுவனத்தின் மதிப்பு பெரிய அளவில் உயரும்.
அடுத்தாக ஜியோ கிரெடிட் நிறுவனத்தின் கடன் வர்த்தகம் 75000 முதல் 80000 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்கும்.
ஆர்பிஐ விதிகள் படி NBFC வைத்திருக்கும் 1 ரூபாய்க்கு சந்தையில் இருந்து 4 ரூபாய் கடனாக வாங்கி வர்த்தகம் செய்யலாம். இதன்படி இக்கூட்டணியும், புதிய முதலீடும் ஜியோ கிரெடிட் நிறுவனத்திற்கும் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய கூட்டணி, நிதி ஆதாரம் மூலம் ஜியோ கிரெடிட் ஹோம் லோன் பிரிவில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தவும் வாய்ப்புள்ளது. இதேவேளையில் ஆரம்பக்கட்டத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்க குறைந்த வட்டியிலும் ஹோம் லோன் கொடுக்கலாம். மேலும் இக்கூட்டணி பேங்க் ஆப் அமெரிக்கா நேரடியாக இந்திய சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கும் காரணத்தால் பெரும் தொகையை உட்செலுத்தி வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்யும் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications