இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தனது சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை கொரோனாவால் தவிக்கும் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார்.
தினமும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் பயமுறுத்தி வரும் மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் போதுமான ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
மகாராஷ்டிரா கொரோனா தொற்று
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 14 முதல் 30 வரையில் 144 தடை உத்தரவுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வர்த்தகம் முடங்கிய நிலையில் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோயாளிகள்
இந்தச் சூழ்நிலையில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் நோயாளிகளுக்குப் போதுமான சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாகக் கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத் தேவையாக இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
முகேஷ் அம்பானி ஜாம்நகர் தொழிற்சாலை
இந்த மோசமான நிலையைச் சமாளிக்க முகேஷ் அம்பானி குஜராத் ஜாம்நகரில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை உடனடியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்ப உள்ளதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் ஷின்டே
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் நகர வளர்ச்சி துறை அமைச்சரான ஏக்நாத் ஷின்டே தனது டிவிட்டரில் குஜராத் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலையில் இருந்து 100 டன் ஆக்சிஜன்-ஐ இலவசமாக அளிக்க உள்ளதாகத் தெரிவித்து. இதை உறுதி செய்தார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள்
மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்கள் கொரோனா 2வது அலையில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தத் திடீர் தொற்று பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுமையாகத் தயாராகாத காரணத்தில் பல சிக்கல்கள் எதிர்கொள்ள நேர்கிறது. இதுமட்டும் அல்லாமல் போதுமான மருத்துவச் சிகிச்சை இல்லாமல் பலர் உயிரிழந்து வருவதாகப் பல செய்திகள் வெளியாகியுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம்
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் போல் பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் மகாராஷ்டிர மாநிலத்திற்குத் தனது சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் இருந்து சுமார் 20 டன் ஆக்சிஜனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் படி தினமும் 1.5 டன் ஆக்சிஜெனை கொச்சி சுத்திகரிப்பு ஆலையில் இருந்து அனுப்பி வருகிறது.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் நைட்ரஜன் வாயு தயாரிப்பதற்காகக் காற்றில் இருந்து தேவையான வாயுவை மட்டும் தனியாகப் பிரிக்க air-separation முறை பயன்படுத்தப்படும். இந்த முறையைப் பயன்படுத்தி 99.9 சதவீத தூய ஆக்சிஜன்-ஐ உற்பத்தி செய்ய முடியும். இதைத் தான் தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் செய்கிறது.