உலக பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் நபர்கள் கூட, இந்த கொரோனா வைரஸ் வந்த பின், தங்கள் சொத்து மதிப்பில் பல பில்லியன் டாலர் மதிப்பை இழந்து இருக்கிறார்கள்.
ஆனால் அதிலும் ஒரு சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் பயங்கரமாக அதிகரித்து இருக்கிறது.
அப்படி அதிகரித்ததன் விளைவாகத் தான், இன்று முகேஷ் அம்பானி, உலகின் சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டையே சொத்து மதிப்பில் முந்தி இருக்கிறார்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் நிரந்தர நம்பர் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த டிசம்பர் 31, 2019-ல் 58.62 பில்லியன் டாலராக இருந்தது. மார்ச் 2020-ல் பங்குச் சந்தை சரிவால் தொடர்ந்து சரிவையும் கண்டது. ஆனால் இப்போது 68.3 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது.
வாரன் பஃபெட்
உலகின் டாப் முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு கடந்த டிசம்பர் 31, 2019 கால கட்டத்தில் 89.27 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் இன்று 67.9 பில்லியன் டாலராகவே சரிந்து இருக்கிறது. மார்ச் 2020-ல் கண்ட வீழ்ச்சிக்குப் பின் இதுவரை பெரிய ஏற்றத்தைக் காணவில்லை.
முந்திவிட்டார்
ஆக, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து உலகின் டாப் பில்லியனர்களில் ஒருவராக இருந்த வார பஃபெட்டை, கச்சா எண்ணெய் தொழில் செய்து, அதுவும் இந்தியாவில் இருந்து தொழில் செய்த முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளி இருக்கிறார். இந்த நிலை தொடருமா அல்லது பங்குச் சந்தைகள் ஏற்ற கண்டு மீண்டும் பஃபெட் முகேஷ் அம்பானியை முந்துவாரா என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.
முதலீடு காலம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஃபேஸ்புக், லண்டனின் பிபி எண்ணெய் கம்பெனி உடபட பலரிடம் இருந்து, தொடர்ந்து குவிந்த முதலீடுகளால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 1,888 ரூபாய் வரைத் தொட்டது. இதனால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சரமாரியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை
இப்போதும் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவராக இருப்பதால் இவ்வளவு சொத்து மதிப்பு வர வில்லை. அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் சுமாராக 48 % பங்குகளை வைத்திருப்பதால் தான் சொத்து மதிப்பு 68.3 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது. கூட்டு வட்டி மதிப்பு உலகின் 8-வது அதிசம் என ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சும்மாவா சொன்னார்!