சென்செக்ஸ் சரிவுக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. இன்று காலை 1,500 புள்ளிகள் சரிவு என கட்டுரை எழுதி முடிப்பதற்குள், சென்செக்ஸ் 2,450 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
இப்படி ஒரு பக்கம் சென்செக்ஸ் மரண அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பெரிய நிறுவனங்களும் பயங்கரமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது.
அதில் அதிக அடி வாங்கி இருக்கும் கம்பெனி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அங்கிருந்தே தொடங்குவோம்.
10 லட்சம் கோடி
கடந்த டிசம்பர் 2019-ல், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Capitalization) 10 லட்சம் கோடி ரூபாய் என்கிற இமாலய சாதனையைச் செய்தது. அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கை தூக்கி வைத்து கொண்டாடாமல் இருந்தவர்களே இல்லை எனலாம்.
பங்கு விலை
ஆனால் இன்று, கதை அப்படியே தலை கீழாக இருக்கிறது. ஒட்டு மொத்த பங்குச் சந்தையும் பலமாக அடி வாங்கிக் கொண்டு இருப்பதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் பங்கு விலை சுமாராக 1,125 ரூபாய்க்கு வந்து இருக்கிறது. இதில் என்ன சரிவு என்று கேட்கிறீர்களா..?
உச்ச விலை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் உச்ச விலை 1,617 என்கிற உச்ச விலையை, கடந்த 20 டிசம்பர் 2019-ல் தான் தொட்டது. ஆனால் இப்போது 1,125 ரூபாய் என்றால் 492 ரூபாய் சரிந்து இருக்கிறது. அதுவும் வெறும் 3 மாத காலத்தில் சரிந்து இருக்கிறது. இதை சந்தை மதிப்புடன் கணக்கிட்டால் எவ்வளவு சரிவு தெரியுமா..?
சந்தை மதிப்பு சரிவு
டிசம்பர் 2019-ல் 10 லட்சம் கோடி ரூபாய் என்றால், இப்போது 7.25 லட்சம் கோடி ரூபாய் தான் சந்தை மதிப்பாக இருக்கிறது. ஆக 10.00 - 7.25 = 2.75 லட்சம் கோடி ரூபாய் நம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு காணாமல் போய் இருக்கிறது. ரிலையன்ஸ் போன்ற மிகப் பெரிய இந்திய கார்ப்பரேட் ஜாம்பவான்களுக்கே இந்த அடி என்றால் குட்டி கம்பெனிகளின் கதி..?