கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர் உள்பட பெருநகரங்களில் ஏராளமான வீடுகள் காலியாக இருந்தன.
ஊரடங்கு காரணமாக ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து பெருநகரங்களில் குறிப்பாக மும்பையில் மீண்டும் வாடகைச்சந்தை உச்சத்திற்கு சென்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை வாடகைச்சந்தை
2020 மற்றும் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட மும்பையின் வாடகைச்சந்தை தற்போது மீண்டும் எழுச்சியடைந்து உயர்ந்துள்ளது. கோவிட்-19 பாதிப்பு காரணமாக பல தொழில் வல்லுநர்கள் தங்கள் சொந்த நகரங்களுக்கு திரும்பி சென்றுவிட்டதால் ஏராளமான வீடுகள், கடைகள் காலியாகின என்பதும், ஹவுஸ் ஓனர்களும், தரகர்களும் வருமானம் இன்றி சிரமப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
15 சதவிகிதம் குறைந்த வாடகை
மும்பையில் ஊரடங்கு நேரத்தில் பல இடங்களில் வாடகை விலை 15-20 சதவீதம் குறைந்தது. நிதி வல்லுநர்கள் மற்றும் வெளிநாட்டினரை சார்ந்திருந்த ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுகள் 25-30 சதவிகிதம் சரிவை சந்தித்தன.
தரகர்களுக்கு கூடுதல் கமிஷன்
மும்பையின் பல பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தங்களுக்கு தெரிந்த தரகர்களுக்கு அதிக கமிஷன் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்து குடியிருப்புவாசிகளை தேடினர். தரகர்களுக்கு அதிக கமிஷன் கிடைத்தாலும் புதியதாக யாரும் குடியேறாததால் தொடர்ந்து மந்தநிலை ஏற்பட்டது
மீண்டும் உச்சம்
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வாடகைச் சந்தை மீண்டும் உச்சம் நோக்கி திரும்ப தொடங்கியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வீடுகளின் தேவை அதிகமானதால் வாடகை கட்டணங்கள் திடீரென உயர்ந்தன. பெரும்பாலான அடுக்குமாடி வாடகை 20-25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் 3BHK அடுக்குமாடி குடியிருப்புக்கு செலுத்திய வாடகை இப்போது 2BHKக்கு செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு காரணங்கள்
மும்பை வாடகைச்சந்தை திடீரென உயர்ந்ததற்கு முக்கிய காரணம் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட நகரத்திற்கு திரும்பியுள்ளனர். பல நிறுவனங்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்வதை நடைமுறைப்படுத்தினாலும், ஊழியர்களை வாரத்திற்கு 2-3 முறை அலுவலகத்திற்கு வருமாறு கேட்டு கொண்டதால் ஊழியர்கள் மும்பையில் குடியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
அரசின் தள்ளுபடி
2021ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா அரசாங்கம் வீட்டு திட்டங்களை மேற்கொள்வதற்காக பில்டர்களுக்கு பல்வேறு தள்ளுபடியை அறிவித்தது. அரசாங்கம் வழங்கிய பலனை பெறுவதற்கு பில்டர்கள் விரைந்ததால் 2021ல் அதிகளவில் புதிய கட்டிடங்கள் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.
தேவை அதிகரிப்பு
மும்பையில் உள்ள இன்றைய வாடகை சந்தையில் சப்ளை குறைந்து, தேவை அதிகரித்து வருவதால், நில உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். அடுத்த 24 மாதங்களுக்கு இதே நிலை தான் தொடரும் என்று தெரிகிறது. ஏனென்றால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பெரும்பாலான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்க 24-36 மாதங்கள் ஆகும்.