தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் போக்குவரத்து செலவினங்கள், லாகிஸ்டிக்ஸ் கட்டணங்கள் என அனைத்தும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
குறிப்பாக தனியார் துறையில் இதன் தாக்கம் மிக அதிகம் எனலாம். குறிப்பாக கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே களையிழந்து காணப்பட்ட பள்ளிகள், இன்று மாணவ செல்வங்கள் நிறைந்து காணப்பட்டது.
கட்டணம் அதிகரிப்பா?
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் செல்லும் பேருந்து, வேன், ஆட்டோ, கார் என அனைத்து கட்டணங்களும் உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலைக்கு மத்தியில், பள்ளிகள் போக்குவரத்து கட்டணத்தினை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.
20% அதிகரிக்கலாம்
மகராஷ்டிராவின் தலை நகர் மும்பையில், பள்ளி பேருந்து ஓட்டுனர்கள், கொரோனாவுக்கு முந்தைய கட்டணங்களை காட்டிலும், நடப்பு கல்வியாண்டில் மாணவர்களை ஏற்றி செல்வதற்கான கட்டணங்களை குறைந்தபட்சம் 20% அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக என தெரிவித்துள்ளனர்.
பள்ளி பேருந்துகள் சங்கம்
இது பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பகுதிகளை பொறுத்து, இந்த கட்டணம் 20% அல்லது அதற்கு அதிகமாக கட்டணம் உயர்த்தப்படலாம் என பள்ளி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மும்பையிலும் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைவரின் கருத்து
இது குறித்து பள்ளி பேருந்து உரிமையாளர்களின் சங்கத்தின் (SBOA) அலுவலகத் தலைவர் ரமேஷ் மணியன் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆக மாணவர்கள் அவரவர் வசிக்கும் இடங்களை பொறுத்து, 20% அல்லது அதற்கு மேலாக கட்டணங்கள் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்?
எரிபொருள் விலையேற்றம், ஓட்டுனர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கான கட்டணம் போன்ற காரணங்களினால், கட்டணம் உயர்த்தும் நிலைக்கு பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன. அதோடு இதில் அதிகரித்த பஸ் கட்டணம், ஆர்டிஓ கட்டணங்கள், போக்குவரத்து அபாரதங்கள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.
கூடுதல் சுமையை கொடுக்கலாம்
கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் முடங்கிக் கிடந்த குழந்தைகள், ஆன்லைனில் வகுப்புகளை பெற்று வந்தனர். அதன் பிறகு தாக்கம் குறைந்த நிலையில் பள்ளி செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் கட்டண அதிகரிப்பானது பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக்கத்தில் என்ன நிலவரம்
மும்பையை தொடர்ந்து பல நகரங்களிலும் கட்டண அதிகரிப்பு செய்யப்படலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. தமிழகத்தினை பொறுத்தவரையில் இது குறித்தான அறிவிப்பு இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.