இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக மும்பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் செய்த செயல் கூரியர் நிறுவனம் மற்றும் மும்பை காவல் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அந்த இளைஞர் தானாக வெடிக்கக்கூடிய ஒரு பொருளை கூரியர் மூலம் அனுப்பி அதன் மூலம் மிகப்பெரிய தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெறலாம் என்று திட்டமிட்டார்.
ஆனால் அவரது திட்டம் சொதப்பியதால் அவர் தற்போது மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மும்பை இளைஞர்
மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூரியர் மூலம் ஒரு பார்சல் அனுப்பி உள்ளார். அந்த பார்சலில் உள்ள சில பொருட்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் ஆனவுடன் தானாகவே வெடிக்கும் விதத்தில் அவர் வடிவமைத்துள்ளார். அதன் மூலம் அந்த பார்சலில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுக்கு இன்சூரன்ஸ் தொகை பெற்றுக் கொள்ளலாம் என்பதை அவரது சதியாக இருந்தது.
யூடியூப் வீடியோ
மேலும் இந்த சாதனத்தை தயாரிக்க அந்த இளைஞர் யூடியூப் வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கூரியர் நிறுவனம்
ஜூலை 12ஆம் தேதி மும்பையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் தொழிலாளர்கள் பார்சல்களை வகைப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பார்சல் வெடித்து தீப்பிடித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து கூரியர் நிறுவனத்தின் நிர்வாகம் காவல்துறைக்கு புகார் அளித்தது.
காவல்துறை
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பார்சலை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பார்சலில் பட்டாசுகள், மின் பேட்டரிகள், செல்போன் உள்பட வெடிக்கும் பொருட்கள் உள்பட ஒருசில பொருட்கள் இருந்தது. இதனையடுத்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து அந்த கூரியர் பார்சல் அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு அவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணை
இந்த விசாரணையின் போது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூரியர் நிறுவன காப்பீடு விளம்பரத்தை தான் பார்த்ததாகவும் அந்த விளம்பரத்தில் ஒரு பொருள் கூரியரில் அனுப்பப்படும் போது சேதமடைந்தால் காப்பீட்டு நிறுவனம் பொருளின் உரிமையாளருக்கு அந்த பொருளின் மதிப்பிற்குரிய தொகையையும், அதைவிட கூடுதலாக 10 சதவீதம் இழப்பீடும் கொடுக்கும் என்பதை அறிந்ததாகவும் தெரிவித்தார்.
வாக்குமூலம்
இதனையடுத்து விரைவாக பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இரண்டு கணினி செயலிகள், செல்போன் மற்றும் மெமரி கார்டுகளை வாங்கிய பில்லை வைத்து சுமார் 10 லட்ச ரூபாய்க்கு போலியாக ஒரு பில்லை தயார் செய்ததாகவும் அதன் பின்னர் மின்சார பேட்டரிகள், பட்டாசுகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை வைத்து செல்போனில் அலாரம் ஒலித்ததும் அந்த சாதனம் வெடிக்கும் வகையில் செட் செய்து வைத்ததாகவும் வாக்குமூலத்தில் அந்த இளைஞர் கூறியுள்ளார்.
வெடித்த பார்சல்
அவரின் திட்டத்தின்படி தொழிலாளர்கள் அந்த பார்சலை கையாளும்போது செல்போனில் அலாரம் அடித்து பார்சல் வெடித்தது என்றும் ஆனால் கூரியர் நிறுவனம் காவல்துறையை அணுகும் என்று தான் கற்பனை கூட செய்தும் பார்க்க வில்லை என்று போலீசாரிடம் அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறை
இதனையடுத்து அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.