இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பை வருகிற ஜனவரி 27ஆம் தேதி முதல் தூங்கா நகரமாக மாறப்போகிறது, ஆம் மும்பையில் ஜனவரி 27ஆம் தேதிக்கு முதல் மால், மல்டிபிளக்ஸ், கடைகள் என அனைத்தும் 24 மணிநேரமும் வருடம் முழுவதும் திறந்து வைத்து வர்த்தகம் செய்யப் புதிய கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த 24 மணிநேர வர்த்தகம் தற்போது அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளது மகாராஷ்டிர மாநில அரசு, இப்புதிய கொள்கையின் மூலம் வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்குப் பிரச்சனைகளும் உருவாகும் என்பதை மறுக்க முடியாது.
5 பில்லியன் பவுண்ட்
லண்டன் நகரத்தின் Night Economy மதிப்பு மட்டும் 5 பில்லியன் பவுண்ட் இதைக் கருத்தில் கொண்டு தான் நாட்டின் வர்த்தகத் தலைநகராக இருக்கும் மும்பையில் முதல் முறையாக இதை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மும்பையைத் தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய நகரங்களிலும் இதேபோல் 24 மணிநேரமும் இயங்க கூடிய கொள்கைகள் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இது கூடிய விரைவில் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
ஆதித்யா தாக்கரே
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பேசுகையில், மாநில அரசின் இந்த முடிவின் மூலம் மும்பையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள், வருவாய் ஈட்டும் வழிகள் உருவாக்கும். அதுமட்டும் அல்லாமல் மும்பையின் வருவாய் அளவும் அதிகரிக்கும். மேலும் இத்திட்டத்தால் அடுத்த சில வருடங்களில் மும்பை சேவைத் துறையில் மட்டும் சுமார் 5 லட்ச வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.
கட்டாயமில்லை
இப்புதிய விதி அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், கட்டாயம் அனைத்து மால்கள், மல்டிபிளக்ஸ், உணவகங்கள் ஆகியவை திறக்கப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. யார் யாருக்கு அதிக வர்த்தகம் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என ஆசை உள்ளதோ அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் மாநில அரசு விளக்கமாகத் தெரிவித்துள்ளது.
முதல்கட்டம்
தற்போது முதல்கட்டமாக வீட்டு குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடங்களைத் தவிர்த்து வெளிப்புற பகுதிகளில் இருக்கும் கடைகள், உணவகங்கள், மால்களில் இருக்கும் தியேட்டர்கள் மற்றும் மில் ஆகிய திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
உணவகங்கள்
மேலும் பந்திரா - குர்லா காம்பிளக்ஸ் மற்றும் நரிமன் பாயின்ட் ஆகிய சாலைகளில் உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி உணவு கடைகளைத் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்களை உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட உள்ளது, விதிகளை மீறிச் செயல்படுபவர்களுக்கு வாழ்நாள் வர்த்தகத் தடை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அமைச்சர் தெரிவித்தார்.