இந்தியாவில் தனியார் நிதி நிறுவனங்களில் கணிசமான வளர்ச்சியினைக் கண்ட ஒரு முன்னணி நிறுவனம் தான் முத்தூட் பைனான்ஸ். உண்மையில் சொல்லப்போனால் நகைக்கடன் என்றாலே இன்றும் பலருக்கும் நியாபகம் வருவது முத்தூட் பைனான்ஸ் தான்.
ஏனெனில் அந்தளவுக்கு தனது சேவையினை வழங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் நிகரலாபம் 59 சதவீதம் அதிகரித்து, 841 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 530 கோடி ரூபாய் லாபத்தினை இந்த நிறுவனம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் செயல்பாட்டின் மூலம் 28 சதவீதம் அதிகரித்து, 2,385 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஜூன் 2019ம் காலாண்டில் இந்த விகிதமானது 1,857 கோடி ரூபாயாக இருந்தது.
இதோடு இந்த நிறுவனத்தின் கடன் வாங்கும் அதிகாரத்தினை 75,000 கோடி ரூபாயாக அதிகரிக்க, பங்குதாரர்களின் ஒப்புதலை பெற முடிவு செய்துள்ளதாகவும் முத்தூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று நோயின் காரணமாக நிறுவனத்தின் செயல்பாடுகள், நிதி நிலைமைகளில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தின் மொத்த ஒருங்கிணைந்த மொத்த கடன் சொத்துக்கள் ஜூன் 30 நிலவரப்படி, 16 சதவீதம் அதிகரித்து, 46,501 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 40,228 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்தூட் பைனான்ஸின் முக்கிய வணிகமான தங்க நகைக்கடனில் ஈடுபட்டு வருகிறது. அதோடு பல்வேறு துணை நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கடன் மற்றும் மைக்ரோ நிதி, இன்சூரன்ஸ் துறை என பல துறையிலும் ஈடுபட்டு வருகிறது.
நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக ஏப்ரல் மாதத்தில் எங்கள் கிளைகள் முற்றிலும் மூடப்பட்டன. ஆனாலும் எங்களின் வணிக தொடர்ச்சியினை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் டிஜிட்டல் சேவைகளை அதிகரித்தோம். சொல்லப்போனால் டிஜிட்டல் கடன் விநியோகத்தில் நான்கு மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று முத்தூட் பைனான்ஸின் எம் டி ஜார்ஜ் முத்தூட் கூறியுள்ளார்.
டிஜிட்டல் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டு எங்கள் தளங்களில் வட்டியை செலுத்துபவர்களுக்கு நாங்கள் கேஷ்பேக் வசதியும் கொடுத்து வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறோம் என்றும் ஜார்ஜ் கூறியுள்ளார்.