டெல்லி: பட்ஜெட்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இன்று சுமார் 2 மணி நேரம் பல்வேறு தொழில் துறை நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இது வழக்கமான நடைமுறை தானே என்கிறீர்களா? இல்லை.. வழக்கத்துக்கு மாறாக ஒரு மாற்றம் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைவராலும் உற்றுக் கவனிக்கப்பட்டது.
பட்ஜெட்டை தாக்கல் செய்யப் போகும் நிதி அமைச்சர் இல்லாமல், இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து உள்ளது,. ஆம்.. நிர்மலா சீதாராமன் இதில் பங்கேற்கவில்லை என்பது தான் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பட்ஜெட் தாக்கல்
பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார் நிர்மலா சீதாராமன் என்பது அறிவிப்பு. இதற்கான தீவிர பணிகளில் அவர், ஈடுபட்டு வருகிறார் என்கிறது நிதித்துறை அமைச்சகம். ஆனால் பிரதமர் மோடி இன்று நடத்திய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது இன்னமும் அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.
சீனியர்கள்
இது பற்றிய முதல் ரியாக்ஷன் காங்கிரஸ் லோக்சபா உறுப்பினரான, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரிடமிருந்து, வந்துள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் "எங்கே நிதியமைச்சர்? ஒருவேளை இந்த இருவரும் (மோடி-அமித்ஷா) அப்படி ஒருவர் இருப்பதையும் மறந்து விட்டனரா" என்று கிண்டலாக கேட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி
போகிற போக்கில் சுப்ரமணியன் சுவாமியையும் வம்புக்கு இழுத்துள்ளார் ஒரு நெட்டிசன். என்ன.. பெரிய பெரிய பொருளாதார வல்லுனர்கள் பங்கேற்றதாக சொல்கிறார்கள். ஆனால் சுப்பிரமணியன் சுவாமியை காணோமே என்று கேலி பேசியுள்ளார் இந்த நெட்டிசன்.
விமர்சனங்கள்
ஆகமொத்தம் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்காதது அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஈட்டியுள்ளதோடு, சமூக வலைத்தளங்களிலும் காரசார கருத்துப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்து விட்டது.