இரண்டு நாள் வார விடுமுறையைத் தொடர்ந்து வங்கி ஊழியர் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நாடு முழுவதும் கடந்த 4 நாட்கள் வங்கி சேவை முடங்கியுள்ளது.
இதனால் சாமானிய மக்கள் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாகப் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் தீர்ந்துவிட்ட காரணத்தால் பணப்புழக்க அளவீடுகள் குறைந்துள்ளது.
இந்நிலையில் வங்கி ஊழியர்களின் இந்த ஸ்ட்ரைக் எதற்காக..?! என்பதைக் கட்டாயம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
9 பெரும் வங்கி ஊழியர்கள் யூனியன்
இந்தியாவில் இருக்கும் 9 பெரும் வங்கி ஊழியர்கள் யூனியன்கள் இணைந்த United Forum of Bank Union (UFBU) தலைமையில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் இணைந்து நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
ஆன்லைன் வங்கி சேவை
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் வங்கி சேவைகள் முடங்கினாலும் ஆன்லைன் வங்கியியல் சேவை அனைத்தும் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் நடக்கும் காரணத்தால் பெருமளவிலான பாதிப்புகள் இல்லை.
கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் பாதிப்பு
ஆனால் இந்தியக் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஆன்லைன் சேவைகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் இப்பகுதிகளில் பணப் பரிமாற்றம் முதல் அனைத்து சேவைகளும் பாதிப்பு அடைந்துள்ளது. இதோடு காசோலை பணப்பரிமாற்றம் பாதிக்கப்படும், கடன் ஒப்புதல் தாமதம் ஆகும்.
வாழ்வா சாவா நிலை
இது எங்களுக்கு வாழ்வா சாவா நிலை, இந்த வேலைநிறுத்த போராட்டம் வங்கி ஊழியர்களின் நலனுக்காக மட்டும் அல்ல நாட்டின் நலனும் இதில் உள்ளது. தனியார் வங்கிகள் நாட்டின் நலனுக்காக இயங்காது, பொதுத்துறை வங்கிகளை நாங்கள் காப்போம் என United Forum of Bank Union (UFBU) அமைப்பின் சஞ்சீவ் குமார் பன்தீஷ் தெரிவித்துள்ளார்.
disinvestment திட்டம்
மத்திய பட்ஜெட் அறிக்கையில் இரண்டு வங்கிகளும், ஒரு இண்சூரன்ஸ் நிறுவனத்தையும் disinvestment பெயரில் தனியார்மயமாக்கப்பட உள்ளது. இதில் வரும் பணம் எங்குச் செல்கிறது என யாருக்கும் தெரியாது என டெல்லியில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியா செயலாளர் பங்கஜ் கபூர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் திட்டமில்லை
மேலும் அரசு எந்த வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கப்போகிறது என்பதில் எவ்விதமான திட்டமும், முன்னேற்பாடும் இல்லை எனப் பாங்க் ஆப் இந்தியா செயலாளர் பங்கஜ் கபூர் தெரிவித்துள்ளார்.
வங்கி ஊழியர்கள் எச்சரிக்கை
மத்திய அரசு வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைத் தொடர்ந்தால் நாடு முழுவதும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டம் நடக்கும். நாட்டு மக்களும் இந்தப் போராட்டத்திற்கும் வங்கி ஊழியர்களின் போராட்டத்திற்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் பங்கஜ் கபூர் கூறியுள்ளார்.
இன்சூரனஸ் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டம்
வங்கி ஊழியர்களின் போராட்டம் 16ஆம் தேதி முடிய உள்ள நிலையில், மார்ச் 17ஆம் தேதி 4 பொதுத்துறை இன்சூரனஸ் நிறுவனங்கள் மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
எல்ஐசி நிறுவன யூனியன்
இதேபோல் எல்ஐசி நிறுவனத்தில் இருக்கும் யூனியன் அமைப்புகள் மார்ச் 18ஆம் தேதி பிற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது எல்ஐசி யூனியன்கள்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2021
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் 2021 அறிக்கையில் அரசு கையிருப்பில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து 1.75 லட்சம் கோடி ரூபாய் தொகையை நாட்டின் வளர்ச்சி திட்டங்களாக நிதி திரட்ட உள்ளதாக அறிவித்தது. இதில் முக்கியமாக இரு வங்கிகளும், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனமும் அடங்கும்.
14 வங்கிகள் இணைப்பு
மத்திய அரசு ஏற்கனவே IDBI வங்கி பங்குகள் விற்பனை மூலம் இவ்வங்கியை முழுமையாகத் தனியார்மயமாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 4 வருடத்தில் சுமார் 14 வங்கி பொதுத்துறை வங்கிகளை வெறும் 4 வங்கிகளாக இணைத்து இந்திய வங்கித்துறையில் மிகப்பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கையைச் செய்துள்ளது.
வங்கி ஊழியர்கள் பாதிப்பு
அரசின் இந்த நடவடிக்கையால் வங்கி ஊழியர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்காக மத்திய அரசிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மார்ச் 4,9 மற்றும் 10ஆம் தேதி துணை தலைமை தொழிலாளர் கமிஷனரிடம் வங்கி ஊழியர்கள் அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இந்தப் பேச்சுவார்த்தையில் எவ்விதமான சாதகமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நாளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வங்கி ஊழியர்களின் இந்தப் போராட்டம் குறித்து மக்களாகிய உங்களின் கருத்து என்ன..?