மார்ச் 28 மற்றும் மார்ச் 29 தேதிகளில் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் இந்த போராட்டம் ஏன் நடைபெறுகிறது. என்ன காரணம்? இதனால் என்னென்ன பணிகள் எல்லாம் பாதிக்கப்படும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
இந்த போராட்டமானது நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29ம் தேதிகளில் நடைபெற உள்ளது என அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
என்னென்ன சங்கங்கள்?
அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள ஐஎன்டியுசி (INTUC), ஏஐசிசிடியு (AIUTUC), ஹெச் எம் எஸ் (HMS), சிஐடியு (CITU), ஏஐயுடியுசி (AIUTUC), டியுசிசி(TUCC), எஸ்இடபள்யூஏ ( SEWA), ஏஐசிசிடியு (AICCTU), எல்பிஎஃப் (LPF), யுடியுசி ( UTUC) உள்ளிட்ட சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன.
யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?
இதில் பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பலவும் கலந்து கொள்கின்றன. நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேலை நிறுத்தத்திற்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
போராட்டத்தின் நோக்கம் என்ன?
இந்த போராட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக வட்டி விகிதம் குறைப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உள்ளிட்ட பலவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர மத்திய அரசின் தனியார்மயமாக்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் சம்பளத்தினை உயர்த்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
என்ன பாதிக்கும்?
இந்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கிகளும் கலந்து கொள்ள உள்ள நிலையில், வங்கி சேவைகளும் பாதிக்கப்படலாம். அதுமட்டும் அல்ல போக்குவரத்து, மின் துறை, வங்கி, இன்சூரன்ஸ் துறை, பணியாளர்கள், எண்ணெய், நிலக்கரி, டெலிகாம், அஞ்சலகம், வருமான வரி துறை உள்ளிட்ட துறை சார்ந்த ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஆக வழக்கத்தினை விட மேற்கண்ட அனைத்து துறைகளிலும் சற்று தாக்கம் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications