ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டதால் இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக நயாரா எனர்ஜி நிறுவனம் பெட்ரோல் , டீசல் விலைகளை உயர்த்தி இருந்தது. தற்போது ஈரான் போர் முடிந்ததால் முதல் நிறுவனமாக நயாரா எனர்ஜி பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துள்ளது.
இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹெச்பி ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் தவிர நயாரா, ரிலையன்ஸ் ஆகிய தனியார் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் , டீசல் விற்பனை செய்கின்றன. இந்நிலையில் நயாரா நிறுவனம், நாடு முழுவதும் தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 என குறைத்துள்ளது.

போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, விலையை அதிகரித்த நயாரா நிறுவனம், தற்போது விநியோகம் சீராகியுள்ளதால் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. ஈரானில் பிப்ரவரி 28ஆம் அதேதி போர் ஏற்பட்டது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வு கண்டது.
எனவே கடந்த மார்ச் 26 அன்று நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை ரூ.5, டீசல் விலையை ரூ.3 என உயர்த்தி இருந்தது. அரசு பொதுத்துறை நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.7.50 வரை உயர்த்தியிருந்தன. தற்போது நயாரா நிறுவனம் மார்ச் மாதம் உயர்த்திய விலையை அப்படியே குறைத்துள்ளது.
போர்ச் சூழல் மற்றும் பதற்றம் தணிந்ததால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் நாடு முழுவதும் சீராகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாடு நீங்கி, எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 73.25 டாலர் வரை வர்த்தகம் ஆகிறது. அதேபோல் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் ஒரு பேரல் 69.81 டாலர் வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துள்ள நயாரா நிறுவனம், புதிய விலை குறைப்பு, நாடு முழுவதும் உள்ள அதன் 7,000-க்கும் மேற்பட்ட பங்குகளில் இன்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது.
எனினும் நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான பெட்ரோல் நிலையங்களை நடத்தி வரும் அரசு பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.107.76க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 க்கு விற்பனையாகிறது. தனியார் நிறுவனமே பெட்ரோல், டீசல் விலைகளை குறைத்துவிட்ட நிலையில் அரசு நிறுவனங்கள் எப்போது பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications

