இந்தியாவின் பழம் பெரும் பெரிய வியாபார நிறுவனங்களில் ஒன்று டாடா குழுமம். இந்தியாவில் கம்ப்யூட்டர் முதல் கடல் உப்பு வரை பல வியாபாரங்களில் ஈடுபட்டு கல்லா கட்டும் பெரு நிறுவனம்.
கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தின் முகமாகப் பார்க்கப்பட்ட ரத்தன் டாடா, தன் அன்றாட பணிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ரத்தன் டாடா ஓய்வு பெறும் போது, யார் அவருடைய தலைவர் பதவியை நிரப்புவார்கள் என்கிற விவாதம் தொடர்ந்து நடந்தது. அந்த விவாதத்துக்கு அமைதியாக முற்றுப் புள்ளி வைத்தவர் சைரஸ் மிஸ்த்ரி.
பதவி காலம்
கடந்த 2012 முதல் அக்டோபர் 2016 வரை, சைரஸ் மிஸ்த்ரி, இந்தியாவின் மிகப் பெரிய வியாபார சாம்ராஜ்யங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் ஆறாவது தலைவராக பதவி வகித்தார். டாடா குழுமத்தில் ஏற்பட்ட பல்வேறு கருத்து முரண்பாடுகள் காரணமாக, கடந்த அக்டோபர் 2016-ல் சைரஸ் மிஸ்த்ரியை பதவியில் இருந்து நீக்கியது டாடா குழுமத்தின் இயக்குநர்கள் குழு.
வழக்கு
டாடா குழுமம், சைரஸ் மிஸ்த்ரியை நீக்கியது தவறு என, மிஸ்த்ரி தரப்பு, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) மும்பை பெஞ்சில் வழக்கு தொடுத்தார்கள். சைரஸ் மிஸ்த்ரி சார்பில், சைரஸ் இன்வெஸ்ட்மெண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்டெர்லிங் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப் ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் தொடுத்தன. இந்த இரண்டு வழக்கையும் நிராகரித்தது தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT).
மேல் முறையீடு
இறுதியில் சைரஸ் மிஸ்த்ரியே தனிப்பட்ட முறையில், தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (NCLAT), தன்னை டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என வழக்கு தொடுத்தார். இன்று சைப்ரஸ் மிஸ்த்ரி தொடுத்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கி இருக்கிறது தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT).
சைரஸ் பக்கம்
இன்று வெளியான தீர்ப்பு, டாடா குழுமத்துக்கு எதிராகவும், சைரஸ் மிஸ்த்ரிக்கு சாதகமாகவும் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சைரஸ் மிஸ்த்ரி டாடா குழுமத்தின் செயல் தலைவராக இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது. அதோடு டாடா குழும தலைவர் என் சந்திரசேகரனை நியமித்தது தவறும் என்றும் தெளிவாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் (NCLAT).
நான்கு வாரம்
சைரஸ் மிஸ்த்ரி மீண்டும் டாடா குழுமத்தின் தலைவராக உடனே அமர முடியாது. அதாவது இந்த தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த முடியாதாம். நான்கு வாரங்கள் கழித்து தான் செயல்படுத்த முடியுமாம். இந்த நான்கு வார காலத்துக்குள், டாடா குழுமம், மேல் முறையீடு செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாமாம். என்ன செய்யப் போகிறது டாடா குழுமம் மேல் முறையீடு செய்து முன்னாள் தலைவருடன் மோதப் போகிறதா..? சமாதானமாக சைரஸையே தலைவராக ஏற்றுக் கொள்ளப் போகிறதா..?