நம் நாட்டின் தூண்களாக இருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வழங்கப்படும் ஒரு திட்டம் தான் கிசான் கிரெடிட் கார்டு. வேளாண் உற்பத்திக்கு தாராளமாக பணம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்தப் பதிவில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம்?, எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?, எவ்வளவு ரூபாய் கடன் கிடைக்கும்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
சமீபத்தில் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி விவசாயிகள் இனி எந்த வித பிணையமும் இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். அதோடு சரியான முறையில் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி விகிதம் வெறும் 4 சதவீதமாக குறையும். பயிர் சாகுபடி, பால் பண்ணை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களை செய்வதற்கு நிதியுதவி தேவைப்படும் விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தினைப் பயன்படுத்தலாம்.
கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் நன்மைகள்: இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நீர் பாசன வசதி மற்றும் பிற விவசாயம் தொடர்பான செலவுகளை சமாளிக்கலாம்.

வட்டி: கிசான் கிரெடிட் கார்டு கடனுக்கான உண்மையான வட்டி விகிதம் 7 சதவீதமாகும். ஆனால் நீங்கள் கடனை முறையாகவும், சரியான நேரத்திலும் திருப்பிச் செலுத்தினால் அரசு வட்டி மானியம் மற்றும் ஊக்கத்தொகை போன்ற பல விஷயங்களை வழங்குகிறது. இதனால் உங்களுக்கான வட்டி வெறும் 4 சதவீதமாகக் குறையும்.
பிணையம் தேவையில்லை: பிற கடன்களுக்கு நம்மிடமிருந்து பிணையமாக ஏதேனும் ஒரு விஷயத்தை வங்கிகள் கேட்கும். உதாரணமாக தங்கம், நிலம் அல்லது பிற சொத்துக்களாக இருக்கலாம். ஆனால் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு எந்த சொத்துக்களையும் அடமானம் வைக்காமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். முன்பு இந்த வரம்பு குறைவாக இருந்தது. தற்போது இந்த திட்டத்தின் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்களின் கீழ் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே சிறு மற்றும் கூறு விவசாயிகளுக்கு பெரிய ஆறுதலாக மாறியிருக்கிறது.
அனைத்து விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் கடன் கிடைக்கும்: இந்த திட்டம் வெறும் பயிர் சாகுபடிக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. மாறாக பால் பண்ணை, கோழி பண்ணை, பன்றி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் பிற விவசாயம் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் கடன் பெறலாம்.
கிசான் கிரெடிட் கார்டு பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?: கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கு கீழ்க்காணும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். கூட்டு நிலம் வைத்துக் கொண்டு கடன் பெற விரும்பும் விவசாயிகள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், குத்தகை நில விவசாயிகள், இந்தியாவை சேர்ந்த 18 வயது முதல் 75 வயதிற்குட்பட்ட விவசாயிகள், மீன் வளர்ப்பு மற்றும் அது சார்ந்த தொழில் முனைவோர் என யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: அடையாளச் சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், நிலம் வைத்திருந்தால் அது தொடர்பான ஆவணங்கள், வருமான ஆவணங்கள், குத்தகை நிலம் வைத்திருந்தால் அதற்கான சான்று, வங்கி கணக்கு விபரங்கள், ஸ்டேட்மெண்ட், புகைப்படம், பயிர் சாகுபடி செய்த சான்றிதழ் போன்றவை தேவைப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?:
ஸ்டெப் 1: பொதுத்துறை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பிஎன்பி, பேங்க் ஆஃப் இந்தியா அல்லது பிற கிசான் கிரெடிட் லோன் வழங்கும் வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஸ்டெப் 2: இணையதளத்தில் உள்நுழைந்து அக்ரிகல்ச்சர் லோன் அல்லது கிசான் கிரெடிட் கார்ட் என்ற பகுதிக்கு செல்லுங்கள். விண்ணப்பப் படிவத்தை திறந்து உங்களுடைய நில விவரங்கள் மற்றும் பயிர் தொடர்பான விபரங்களை பூர்த்தி செய்யுங்கள்.
ஸ்டெப் 3: தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டி வரும். எல்லா தகவல்களையும் வழங்கி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பத்தை வழங்கியவுடன் உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். அதை எதிர்கால தேவைக்காக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஆஃப்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: அதற்கு அருகில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் அல்லது கிராமப்புற வங்கி கிளைக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: வங்கியில் இருந்து கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பப் படிவத்தை பெறவேண்டும். உங்களுடைய தகவல்கள், நில விவரங்கள் மற்றும் விவசாய விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.
ஸ்டெப் 3: தேவைப்படும் பிற ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை இணைத்து வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கி அதிகாரிகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர விவசாயிகள் பொது சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
4 சதவீத வட்டி மானியத்தை பெற வேண்டுமானால் அதற்கு விவசாயிகள் பயிர் அறுவடை முடிந்து விற்பனை எல்லாம் முடித்து உரிய காலத்திற்குள் சரியாக திருப்பிச் செலுத்த வேண்டும்.விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் உண்மையிலேயே ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம்


Click it and Unblock the Notifications