பொதுவாக பான் அட்டையை வருமான வரி செலுத்துவதற்கு தான் பயன்படுத்தப்படுகிறது என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பான் அட்டையை வைத்து பல காரியங்களைச் செய்யலாம்.
பல இடங்களில் பான் அட்டை அவசியம், பல இடங்களில் பான் அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பான் அட்டையை எங்கு எல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற விவரங்களை இப்போது பார்ப்போம்.
1. வாகனங்களை வாங்கும் போது அல்லது விற்கும் போது அடையாள அட்டையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. வங்கிக் கணக்கைத் தொடங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. வங்கியில் ஒரு டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்ட் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
4. பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய மற்றும் டீமேட் கணக்கைத் தொடங்க பான் கார்ட் அவசியம். அங்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. உணவகங்களிலோ அல்லது ஹோட்டல்களிலோ 50,000 ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் பான் அட்டை கொடுக்க வேண்டும்.
6. வெளிநாட்டு பயணங்களுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் பணமாக செலவழித்தாலோ அல்லது, வெளிநாட்டு கரன்ஸிகளை மாற்றினாலோ பான் அட்டை கொடுக்க வேண்டும்.
7. ஒரே நாளில் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் அட்டை கொடுக்க வேண்டும். இப்போது பெரும்பாலான வங்கிகள் வங்கிக் கணக்கை தொடங்கும் போதே பான் அட்டையை கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள்.
8. ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கியில் கொடுத்து வங்கி டிராஃப்ட் அல்லது பே ஆர்டர்கள் அல்லது வங்கி காசோலைகளை வாங்கினால் பான் அட்டை அவசியம்.
9. வங்கியில் போடும் ஃபிக்ஸட் டெபாசிட் தொகை 50,000 ரூபாயை விட அதிகமாக ஒரே நாளில் டெபாசிட் செய்தால் அல்லது ஒரு வருடத்துக்குள் 5 லட்சம் ரூபாயைக் கடந்தால் பான் அட்டை அவசியம்.
10. 50,000 ரூபாய்க்கு மேல் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தினால் பான் அவசியம்.
11. பங்குகள் தவிர, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மற்ற செக்யூரிட்டீஸ்களை வாங்கினால் பான் அவசியம்.
12. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பட்டியலிடப்படாத பங்குகளை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் பான் அவசியம்.