இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயம். நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வில் பல கெடுபிடிகள் கடைபிடிக்கப்படும். மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட ஆடை அணிந்து தான் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் உண்டு.
தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படும் போதும் முழுமையாக பரிசோதனைக்கு ஆளாவார்கள். இத்தனை கெடுபிடிகள் நடந்தாலும் நீட் தேர்வு மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த ஆண்டுக்கான நீட் தோ்வு கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முன் கூட்டியே நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு சிதைக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சிலர் செய்த தவறுக்காக தேர்வே ரத்து செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து போராட்டமும் நடத்தப்பட்டது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீட் மறுதேர்வு வருகிற ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை இதுபற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் தேர்வை நியாயமான, பாதுகாப்பான மற்றும் தேர்வர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் நடத்த தேசியத் தேர்வுகள் முகமை உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் மறுதேர்வுக்காக தேர்வர்களுக்காக சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
1.கடந்த காலங்களில் தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தேர்வுக்கான கால அளவு 195 நிமிடங்களாக (3 மணி நேரம் 15 நிமிடங்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுதல் மற்றும் பிற கண்காணிப்பு நடைமுறைகள் போன்ற தேர்வு நடைமுறைகளுக்குத் தேவைப்படும் நேரமும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்வாக நடைமுறைகளால் தேர்வெழுத்துவதற்கான நேரம் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் கருதிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தேர்வு நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2. வினாத்தாள் புத்தகத்தில் rough work செய்வதற்கான இடவசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. அதாவது 2 பக்கங்கள் மட்டுமே rough work செய்ய வழங்கப்பட்ட நிலையில் அது 4 பக்கங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படம் வரைதல், கணக்கு போட்டு பார்த்தல் ஆகியவற்றுக்கு இதனை பயன்படுத்தலாம்.
3. கேள்வித்தாள் வடிவம் மாற்றப்பட்டுள்ளது. இன்ஸ்டிரக்ஸன்ஸ் பக்கத்திற்கு இரண்டு rough work பக்கங்களும், இறுதியில் இரண்டு rough work பக்கங்களும் இடம்பெறும். அதே போல இடது கை பக்கம் கொண்ட மாணவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் வகையில் கேள்வித்தாள் லே அவுட் மாற்றப்பட்டுள்ளது.
இந்த முறை நீட் மறுதேர்வு நியாயமான, பாதுகாப்பான முறையில் நடத்த உறுதி அளிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கேள்வி தாள் தயாரித்த ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முறைகேடு எதுவும் நடக்காது என உறுதி தந்துள்ளது.


Click it and Unblock the Notifications


