நாடு முழுவதும் மே 3ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவு தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் நுழைவு தேர்வினை நடத்திய தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். நாடு முழுவதுமே கடந்த மே மாதம் கடந்த 3ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதி இருந்தார்கள். இந்த சூழலில் பல்வேறு இடங்களில் நீட் நுழைவு தேர்வின் போது முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

நீட் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்னரே ராஜஸ்தான் மாணவர்களுக்கு கேள்விகள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ராஜஸ்தான் சிறப்பு விசாரணை குழு காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது கைகளால் எழுதப்பட்டு மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் கண்டறியப்பட்டன. அதில் மே 3ஆம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்வில் இடம் பெற்ற கேள்விகளைப் போலவே சுமார் 140 கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மே 3ஆம் தேதி நடைபெற்ற ஒட்டுமொத்த நீட் தேர்வையும் ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது, தேர்வர்கள், பெற்றோர்கள் மற்றும் மக்களிடையே தேசிய தேர்வு முகமை வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு ஒப்புதலோடு மே மூன்றாம் தேதி அன்று நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒருமுறை நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக மாணவர்கள் புதிதாக பதிவு செய்ய தேவை இல்லை , கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் வசூல் செய்யப்படாது மேலும் ஏற்கனவே வசூல் செய்யப்பட்ட கட்டணமும் மாணவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வினாத்தாள் கசிவு தொடர்பான விரிவான விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு தேசிய தேர்வு முகமை முழு ஒத்துழைப்பு வழங்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ரத்து என அறிவித்திருப்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்து இருக்கிறது. யாரோ சிலர் செய்த தப்புக்காக நேர்மையான முறையில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் உண்டாகிறது. மாணவர்களுக்கு இது தேவையற்ற மனச்சிக்கலையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதற்கிடையே மாணவர்கள் [email protected] | 011-40759000 / 011-69227700 என்ற எண்கள் மூலம் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

