இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான மின்வெட்டு நிலவி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் அன்றாட அவசியத் தேவையாக மின்சாரம் மாறியுள்ளது. குறிப்பாக எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
மொத்தத்தில் நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவையானது அதிகரித்துள்ளது.
ஆனால் உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் நிலக்கரி பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் மின் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் இந்தியா மின்சார தேவைக்கு மாற்று ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
உபரி மின்சாரம் விற்பனை
இந்தியாவின் அண்டை நாடான நேபாள் மழைக்காலத்தில் நாட்டின் நீர்மின் திட்டங்களில் இருந்து தயாரிக்கப்படும் 200 மெகவாட் உபரி மின்சாரத்தை விற்பனை செய்ய, இந்திய நிறுவனங்களை டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க நேபாள அரசு நாடியுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
இந்த ஏலத்தில் ஓபன் ஆக்சஸ் கன்சியூமர்ஸ், ஒழுங்குபடுத்தப்பட்ட பயன்பாடுகள், சப்ளை நிறுவனங்கள், மத்திய மின்சார வாரியத்தால் வழங்கப்பட்ட வர்த்தக உரிமம் கொண்ட வணிகர்கள் உள்ளிட்ட பலரும் ஏலத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள், அவர்கள் அனைவரும் ஏலத்தில் விண்ணப்பிக்கலாம் என மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் குல்மன் கிஸிங் தெரிவித்துள்ளார்.
டெண்டர் மூலம் விற்பனை
364 மெகாவாட் மின்சார உற்பத்தியில், 200 மெகாவாட் மின் உற்பத்தியினை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.ஜூலை 1ம் தேதி டெண்டர் முழுமையாக முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தியறிக்கையில் நேபாளத்தில் உபரியாக இருக்கும் மின்சாரத்தை ஜூலை 1 முதல் நவம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் 200 மெகாவாட் மின்சாரத்தினை, இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முன்மொழியப்பட்டதாக NEA தெரிவித்துள்ளது.
எப்போது வரை விண்ணப்பிக்கலாம்
ஆக ஆர்வமுள்ள இந்திய நிறுவனங்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது மே 6, 2022 அன்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
நேபாள் அரசு சமீபத்தில் 364 மெகாவாட் மின்சாரத்தினை விற்பனை செய்ய இந்திய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆக விருப்பம உள்ளவர்கள் ஒரு மெகாவாட்டுக்கு 30,000 ரூபாய் டெபாசிட் செலுத்தி மின்சாரம் வாங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டூ நேபாள்
தற்போதைய நிலவரப்படி நேபாளம் இந்தியாவிடம் இருந்து மின்சாரம் வாங்கிக் கொண்டுள்ளது. மழைக்காலத்தில் நேபாளிடம் இருந்து இந்தியா வாங்கிக் கொள்ளும். சமீபத்தில் இந்தியாவும் நேபாளும் இணைந்து செயல்பட தீர்மானித்தது குறிப்பிடத்தக்கது.